யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்படும், விசேட அதிரடிப்படை
-பாறுக் ஷிஹான்-
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் உதவியுடன் யாழில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம்(30) கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிசார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டமை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இத்தாக்குதலுக்கு தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என்பதுடன் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்குகின்றார் என அறிய முடிகின்றது.சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும் அதே வேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்களை மிக விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கின்றேன்.
இதே வேளை யாழில் அண்மைக்காலமாக பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பிலான நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்குடன் பூஜித ஜெயசுந்தர யாழ்ப்பணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட நிலையில் நேற்றைய தினம்(30) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் நலன்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அத்துடன் அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து தாக்குதலாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
Post a Comment