இலங்கை அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவு - ஹிஸ்புல்லா கவலை
-ARA.Fareel-
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் தொடர்பான விவகாரத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டமை முஸ்லிம்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு வாக்கெடுப்புகளின் போதும் இலங்கை பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி சர்வதேசத்தில் பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இஸ்ரேலியர்களால் பலஸ்தீன மக்களுக்கெதிராகவும் அல் அக்ஸா பள்ளிவாசலுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் தொடர்பான வாக்கெடுப்புகளில் இலங்கை பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தது. இஸ்ரேலின் நிலஆக்கிரமிப்பையும், சட்டவிரோத குடியேற்றங்களையும், பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் வன்முறையையும் இலங்கை எதிர்த்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது இலங்கை பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. இரு சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள சமரவீரவும், தற்போதைய வெளிவிவகார அமைச்சரான ரவி கருணாநாயக்கவும் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டமை வருந்தத்தக்கது. முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள இலங்கை அரசாங்கம் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளாது பலஸ்தீனுக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக கருதும் வணக்கஸ்தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் உட்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து தம்வசம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு எந்த அதிகாரமுமில்லை. இன்று பலஸ்தீனில் அப்பாவி மக்கள் இஸ்ரேலியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதைப்பார்த்துக் கொண்டு பார்வையாளர்களாக முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. பலஸ்தீன மக்களுக்காகவும் அல்அக்ஸாவின் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.
ஐ.நா.சபையின் உறுப்பு நாடான இலங்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து அல் அக்ஸாவையும், பலஸ்தீனர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
இன்றைய அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்தே, அதனை ஆட்சியில் அமர்த்துவதற்கு முஸ்லிம்கள் பங்குதாரர்களானார்கள். எனவே பலஸ்தீன் மற்றும் அல் அக்ஸா விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் சாதிக்கக்கூடாது என்றார்.
Post a Comment