Header Ads



இனவாதத்தை ஆதரிப்பது, தண்டனைக்குரிய குற்றம் - ரணில் எச்சரிக்கை

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தைத் தூண்டிவிடும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடந்த அரசு அனுசரணை வழங்கியது எனவும், தற்போதைய அரசு அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அளுத்கம, தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்

சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கு மேலதிகமாக அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் நிரந்தர முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததன் பின்னர் பிரதமரிடம் நேரடி கேள்வி பதில் சுற்று ஆரம்பமானது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

"நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன மற்றும் அடிப்படைவாதங்களைப் பரப்பும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றை தடுக்கவும், நாட்டில் சட்ட, ஒழுங்கைப் பாதுகாக்கவும் அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? அதேபோல், 2014ஆம் ஆண்டு அளுத்கம தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அரசால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?'' என்று மரிக்கார் எம்.பி. இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர்,

"சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்குமிடையிலான ஒற்றுமையின் நிமித்தம் எமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலங்களில் (மஹிந்த ஆட்சிக்காலத்தில்) திட்டமிட்ட இன மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. அரசின் அனுசரணை இல்லாமல் அவை அப்போது இடம்பெற்றிருக்கவில்லை. எனினும், நாம் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்தோம்.

காணாமல்போனோர் பற்றி அலுவலகம் ஸ்தாபிப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எமது அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தையும் மத ஒற்றுமையையும் ஏற்படுத்தவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளால் கடந்த ஆட்சியின்போது அனுசரணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், இம்முறை அவ்வாறான அனுசரணை கிடைக்கவில்லை என்பதே இங்குள்ள வித்தியாசம். மக்கள் இதற்கு ஆதரவளிப்பதில்லை.

அதிகாரத்துக்கு வர முயற்சிப்பவர்களே இனவாதத்துக்கு அர்த்தம் கற்பிக்கப் பார்க்கின்றனர். இன மற்றும் அடிப்படைவாதங்களைத் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாகும். எவ்வாறிருப்பினும், இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடிவடையும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், ஊடகங்கள் சிலவும் இந்த இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுகின்றன. சிலர் இதற்கு ஆதரவாக பேசினாலும் பெரும்பாலானோர் இதை ஆதரிப்பதில்லை. இருப்பினும், இன மற்றும் அடிப்படைவாதங்களைத் தூண்டிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸாரால் இது தொடர்பில் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனங்களுக்கிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கு மக்களிடம் தகவல்களைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அளுத்கம, தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் நிரந்தர முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கோ அல்லது விகாரைகளுக்கோ சேதம் ஏற்படும் பட்சத்தில் தகுந்த நட்டஈடுகளை வழங்குவதே எமது அரசின் கொள்கையாகும்.

இன மற்றும் அடிப்படைவாதங்களில் தொங்கி குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சிப்பவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது. அவ்வாறு ஆதரவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, இன மற்றும் அடிப்படைவாதங்களுக்கு இங்கு இடமளிக்கப்படமாட்டாது. அப்படியானவர்கள் இறுதியில் குப்பைக்கூடைக்குள் தூக்கியெறிப்பட்டமைதான் வரலாற்றுச் சான்றாகும்.

இதேநேரம், இன மற்றும் அடிப்படைவாதங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஆராய்ந்து நட்டஈடு வழங்கப்படும்'' - என்றார்.

No comments

Powered by Blogger.