சவூதியில் 15 வயதிற்கு குறைந்த பெண்களை, திருமணம்செய்ய முடியாது
-விடிவெள்ளி-
15 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களை திருமணம் முடிக்கத் தடை விதிக்க வேண்டுமென்ற சிபாரிசினை சவூதி அரேபியாவின் சூறா சபையின் பல அங்கத்தவர்கள் இணைந்து நீதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூதி அல்-கலப், லதீபா அல்-ஷாலான், நௌவூறா அல்-முசெயிட், இஸ்ஸா அல்-காலித் மற்றும் பௌவுஸ்யா அபா அல்-காலித் ஆகியோரால் வரையப்பட்டுள்ள இச் சிபாரிசில் பெண்கள் 15 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட வயதிலேயே திருமணம் செய்யப்பட வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை திருமணம் செய்து கொள்ளவுள்ள பெண், அவரது தாய் மற்றும் குறித்த பெண் திருமண வாழ்க்கைக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் மற்றும் சமூகவியல் ரீதியாவும் தகுதியாவர் என விஷேட குழுவினால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ அறிக்கையினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமெனவும், மணமகனின் வயது பெண்ணின் வயதைவிட இரட்டிப்பான வயதைத் தாண்டியதாக இருக்கக் கூடாது எனவும் திருமண விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதியொருவனினாலேயே திருமண ஒப்பந்தம் செய்துவைக்கப்பட வேண்டுமெனவும் சூறா சபை அங்கத்தவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மனித வாழ்க்கைகக்குத் தீங்கு ஏற்படாது பாதுகாத்தல் என்ற ஷரீஆ சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே தமது சிபாரிசுகள் அமைந்துள்ளதாக விளக்கமளித்த சூறா சபை அங்கத்தவர்கள், இளவயதுத் திருமணங்களால் ஏற்படுகின்ற உடல்ரீதியான, உளரீதியான மற்றும் சமூகவியல் ரீதியான பாதிப்புகள் தக்க சான்றுகளாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் என்பது வணக்கவழிபாடு, சமயப் பிரச்சினைகள் போலல்லாது, மாற்றங்களுக்குட்படுத்தப்பட வேண்டிய வாழ்க்ககைப் பிரச்சினையாகும் எனத் தெரிவித்த அவ்வுறுப்பினர்கள், பல இஸ்லாமிய நாடுகள் திருமண வயதினை ஒழுங்குபடுத்தியுள்ளன. எகிப்தியச் சட்டத்தில் மணப்பெண்ணின் வயது 18 வயதுக்கு கீழ்ப்பட்டதாக இருக்குமாயின் அவ்வாறான திருமணம் தடை செய்யப்படுகிறது எனவும் மேற்கோள் காட்டினர்.
இளவயதுத் திருமணங்கள் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, பாடசாலையிலிருந்து இடைவிலகும் நிலையினையும் பெண்களுக்கு ஏற்படுத்துகின்றது. பெண்களை மலினப்படுத்தும் பாரம்பரிய சமூகக் கலாசார நிலைகளை மாற்றி கல்வியூடாக பெண்களை வலுப்படுத்த வேண்டும் என முன்னணி சூறா சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
வறுமைக்கும் இளவயதுத் திருமணத்திற்கும் இடையேயான தொடர்பு என்பது பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலான சுழற்சியாகும். இளவயதுத் திருமணத்திற்கு வறுமை காரணமாக இருப்பது மாத்திரமன்றி அது தொடர்ச்சியான வறுமைக்கே இட்டுச் செல்கிறது. குறிப்பாக இளம் தாய்மார் விவாகரத்துச் செய்யப்படும்போது அல்லது கணவர் மரணித்துவிடும்போது தமது குடும்பத்தை பராமரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
1988 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைப் பிரகடனம் உள்ளிட்ட சவூதி அரேபியா கையொப்பமிட்டுள்ள சர்வதேச சாசனங்களில் இளவயதுத் திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
In our country only marriage age is viewed as some divine revelation. Big time our community grows up and take some mature stance.
ReplyDelete