சுதந்திரக் கட்சி பசு மாடு, ஐ.தே.க. எருமை மாடு - பிரசன்ன ரணதுங்க
நாட்டில் அரசியலை சுதந்திரக் கட்சி என்ற பசு நிலத்திற்கு இழுத்துச் செல்ல முற்படும் போது ஐக்கிய தேசியக் கட்சி என்ற எருமை மாடு சேற்றில் தள்ளி விடுகின்றது என கூட்டு எதிரணியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மைத்திரி – மஹிந்த சந்திப்பு மீண்டும் மஹிந்த தரப்புக்கு ஏமாற்றத்தையே தரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி – மஹிந்த சந்திப்பு தொடர்பில் தற்போது வரையில் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் கூட்டு எதிரணி செல்லவில்லை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் வந்து இது பற்றி பேசுவாராயின் அதன் பிறகு மேற்படி விடயம் குறித்து சிந்திக்க முடியும்.
இருப்பினும் மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை கூறுகின்ற போதே உண்மையாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர். 2015 ஆம் ஆண்டில் ஏமாற்றம் அடைந்தது போலவே மீண்டும் ஒருமுறை ஏமாற்றும் செயற்பாடாகவே மைத்திரி – மஹிந்த சந்திப்பு அமைந்திருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை காட்டிக் கொடுத்துவிட்டு ஜனாதிபதி பதவியை பறித்துக்கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் தான் உண்மையான ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் உள்ளார்கள்.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஒரு மிகப்பெரிய கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கே நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். அதனால் எதிர்க்கட்சியிலிருந்து பேசுவதை தவிர்த்து எதிர்காலம் குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
தேசிய அரசாங்கம் அமைத்ததால் சாதித்து ஒன்றும் இல்லை என்கின்ற போது தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் தற்போது உலக நாடுகளுக்கு தெரிந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தின் போதுதான் அது உலகறிந்த விடயமானது. காரணம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஓடிச் சென்று உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்பதை மாத்திரமே அரசாங்கம் செய்தது.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தற்போதைய அரசாங்கம் இன்றுவரையில் செய்யவில்லை என்பதே உண்மையாகும். இதற்கு பொறுப்பேற்பதற்கும் அமைச்சர் ஒருவர் இல்லை அவர் வெள்ளம் வழிந்தோடிய பின்னர் நாட்டிற்கு வந்து போலியான பெருங்கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்.
யுத்தக் குற்றம் இழைத்தார்கள் என்று கூறுகின்ற இராணுவ வீரர்கள் இல்லாவிடின் இதனைவிட பாரிய உயிர் தொகையினை இழக்க நேரிட்டிருக்கும் அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் அனர்த்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயார் நிலையில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தி வைத்திருந்ததால் விபத்துக்கள் குறைவடைந்தன.
எவ்வாறாயினும் இன்று நாட்டின் அரசியல் சூழல் எருமை மாட்டையும் பசுமாட்டையும் ஒரே கயிற்றில் கட்டி வைத்தது போன்று இருப்பதால் சுதந்திர கட்சி என்ற பசு மாடு நிலத்திற்கு செல்ல முற்படுகின்ற போது ஐக்கிய தேசியக் கட்சி என்ற எருமை மாடு சேற்றினுள் இழுத்துச் சென்று விடுகின்றது. அதனால் தான் அரசியல் நிலையில்லாத் தன்மை நீடிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
Née enna maadu????
ReplyDelete