Header Ads



பயங்கரவாதி பக்தாத்தி இஸ்லாமிய கிலாபத்தை, பிரகடனம்செய்த பள்ளிவாசல் மீட்கப்பட்டது

ஈராக்கின் மொசூல் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த புகழ்பெற்ற மசூதியை ராணுவப் படைகள் கைப்பற்றியுள்ளன.

850 ஆண்டுகள் பழமையான க்ராண்ட் அல் நூரி மசூதியிலேயே காலிபேட்களின் தேசம் அமைக்கப்பட்டதாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.

இந்த மசூதியைக் கைப்பற்றியதன் மூலம் காலிபேட்களின் தேசம் என்ற வாதம் முறியடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் ராணுவம் அறிவித்துள்ளது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைநகரம் போல் செயல்பட்ட மொசூல் நகரின் பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், விரைவில் நகரம் முழுமையும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா ரசூல் கூறியுள்ளார்.

தற்போது ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் க்ராண்ட் அல் நூரி மசூதியானது இஸ்லாம் மதத்தினருக்கு மிக முக்கியமான மசூதியாகும்.

மெக்கா மற்றும் மதீனாவில் அமைந்துள்ள க்ராண்ட் மசூதி, ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா க்ராண்ட் மசூதி, டமாஸ்கஸில் அமைந்துள்ள உமய்யாத் மசூதி ஆகியவைகளுக்கு நிகராக க்ராண்ட் அல் நூரி மசூதியானது இஸ்லாமியர்களால் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆதரவுடன் போரிடும் ஈராக் படைகள் மசூதியைக் கைப்பற்ற முயற்சித்த போது ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளால், அதனைத் தகர்க்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.