Header Ads



டெங்குவுக்கு இளம் பெண் பலி - உரிய விசாரணைக்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை

டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண் கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் ஏற்பட்ட போதும், தற்போது ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகி உள்ளது.

ரொமாலி, ப்ரென்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறைவேற்று பதவியில் செயற்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவரது வயது 25 ஆகும்.

பிரித்தானியாவில் உள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி தொடர்பான பட்டத்தை பெற்ற ரொமாலி, சந்தைப்படுத்தல் கற்கை நெறியின் இறுதி பகுதியை நிறைவு செய்துள்ளார்.

காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ரொமாலியை குறித்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலை ஆபத்தான நிலைமையில் இல்லை என கூறியமையினாலும், அவருக்கு விசேட வைத்தியரினால் முழுமையாமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ரொமாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் அவரின் பெற்றோரிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலையின் கட்டணத்தை ஏற்க கூடியவர்கள் என அறிந்தமையினால் ரொமாலிக்கு சொகுசு அறை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ரொமாலியின் மூக்கில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதன்போது அவர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும், டெங்கு நோயின் போது மூக்கில் இருந்து இரத்தம் வருவது சாதாரண ஒரு விடயம் எனவும் பயப்பட வேண்டாம் எனவும் அவரது பெற்றோரிடம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் வைத்தியசாலையில் அதிக எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் நோயாளிக்கு இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதனால் அது தீவிர நிலைமையாகவே காணப்பட்டதென வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு இரத்த கசிவு ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரும் அழைக்கப்படவில்லை.

உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு அவர் கடுமையான வயிற்று வலியில் இருந்தார் என வைத்தியர்களிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இரப்பை அழற்சியினால் (Gastritis) அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் Gaviscon என்ற மருத்து வழக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கடுமையான கை வருத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது திடீர் மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.

அதுவரையிலும் அது தசை வலி என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் போது வைத்தியர்கள் தோள்பட்டையை மசாஜ் செய்துள்ளனர். எனினும் அவர் அதற்கு அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.

எப்படியிருப்பினும் 7 நாட்கள் முழுவதும் ரொமாலிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய சிகிச்சைக்காக 780000 ரூபாய் பட்டியல் ஒன்றை பெற்றோரிடம் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தினால் இன்னமும் அதிர்ச்சியிலுள்ள பெற்றோர் இது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.