Header Ads



பேப்பர் கப்பில், உள்ள ஆபத்து

‘உபயோகிக்க எளிதாக, பயன்படுத்தியதும் தூக்கிப் போட்டுவிடும் வசதி கொண்ட பேப்பர் கப்புகள் புற்று நோயையும் உண்டாக்கும் அபாயம் கொண்டவை என்பது தெரியுமா?’ என்று சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்புச் செய்தி ஒன்று வெளியானது.வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு குளிர்பானம் கொடுப்பது முதல் தேநீர் அருந்துவது வரை நம் தினசரி வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் பேப்பர் கப்பில் இப்படி ஒரு ஆபத்தா என்று பொது நல மருத்துவர் அர்ச்சனாவிடம் பேசினோம்...

பேப்பர் கப்புகளில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களைப் பருகக் கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்?‘‘சூடான மற்றும் குளிரான பானங்களை உபயோகிக்கும் வகையில்பேப்பர் கப்புகள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஒருவிதமான மெழுகு கலவையை பேப்பர் கப்புகளில் தடவுகிறார்கள்.காபி, தேநீர் மற்றும் சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. இதனால் சாதாரண வயிற்றுவலியிலிருந்து மோசமான புற்றுநோய் வரை பல்வேறு தேவையற்ற விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.’’

சூடான பானங்களை பேப்பர் கப்புகளில் அருந்துவதால் என்னென்ன பிரச்னைகள் வரும்?‘‘தொடர்ந்து சூடான பானங்களை பேப்பர் கப்புகளில் அருந்துவதால் அவற்றிலுள்ள மெழுகு கரைந்து நம் உடலினுள் சென்று மஞ்சள் காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தவல்லது. குறிப்பாக, பெண்கள் பேப்பர் கப்பைத் தொடர்ந்து உபயோகிப்பதால் பல்வேறு ஹார்மோன் பிரச்னைகள், பருவமடைவதில் சிக்கல், குழந்தையின்மைக் கோளாறு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

குழந்தைகளிடம் இந்த ஹார்மோன் மாற்றங்கள் வேறு வழியில் வெளிப்படலாம். அடம்பிடிப்பது, எதற்கெடுத்தாலும் அழுவது, கேட்டது கிடைக்கவில்லையென்றால் உடனடியாகக் கோபப்படுவது போன்றவை ஏற்படலாம். கிட்டத்தட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு இணையான தீய விளைவுகளையே பேப்பர் கப்புகளும் உண்டாக்குகின்றன.’’தண்ணீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டுமா?‘‘சூடாக இல்லாத பானமாக இருந்தாலும் பேப்பர் கப்புகளில் அருந்தும் பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நாம் பேப்பர் கப்பினுள் பானங்களை நிரப்பிய சில நொடிகளிலேயே அதனுள் இருக்கும் ரசாயனம் பானங்களுடன் கலக்க ஆரம்பித்துவிடுகிறது. சாதாரண தண்ணீரில் கூட இந்த ரசாயனங்கள் கலந்துவிடக்கூடியவை என்று சில நவீன ஆய்வுகள் கூறியிருக்கின்றன.’’

ரசாயனக் கலப்பில்லாமல், மெழுகு கலக்காமல் பேப்பர் கப்புகளைத் தயாரிக்க முடியாதா?

‘‘பேப்பர் கப்புகள் தயாரிக்கப்படும்போது அது பானங்கள் அருந்துவதற்குண்டான வகையில் தடிமனாகவும், பொருட்களைத் தாங்கக்கூடிய வகையில் அடர்த்தியாகவுமே தயாரிக்கப்படுகிறது. அதனால், மெழுகு மற்றும் வேதிப்பொருட்கள் கலக்காமல் பேப்பர்கப்புகள் செய்வது சாத்தியம் இல்லை. ஒருவேளை, மெழுகுப் பொருட்கள், ரசாயனம் எல்லாம் கலக்காத வகையில் பேப்பர் கப்புகள் தயாரிக்கப்பட்டால் நல்லதுதான். அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.’’

பேப்பர் கப்புக்கு மாற்று என்ன?

‘‘உபயோகிப்பதிலும், கையாள்வதிலும் கொஞ்சம் சிரமமானாலும் பழைய வழக்கப்படி கண்ணாடி மற்றும் சில்வர் பாத்திரங்களை உபயோகிப்பதே உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. தேநீர் கடைகளில்தான் இந்த பேப்பர் கப்புகள் அதிகம் புழங்குகிறது என்பதால் கடைகளில் தேநீர் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’

No comments

Powered by Blogger.