முஸ்லிம்களுக்கு எதிரான நாசகாரம், பொதுபல சேனாவின் முக்கிய தேரர்களை விசாரிக்க தீர்மானம்
நுகேகொடை, மஹரகம பகுதிகளில் நான்கு முஸ்லிம் கடைகளை தீ வைத்து எரித்தமை மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தீவைப்பு, ஏனைய பகுதிகளில் முஸ்லிம் கடைகள் மீதான அடாவடிகள் தொடர்பில் பொதுபல சேனாவின் முக்கிய தேரர்கள் பலரை விசாரணை செய்ய சிறப்பு பொலிஸ் குழு தீர்மானித்துள்ளது.
நுகேகொடை, மஹரகம பகுதிகளில் நான்கு முஸ்லிம் கடைகளைத் தீ வைத்து எரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை விஷேட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணை செய்து வரும் சிறப்புப் பொலிஸ் குழு அவரிடம் இருந்து வெளிப்படுத்தி கொண்டுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
தேரர்களுக்கு மேலதிகமாக பொதுபல சேனாவில் இணைந்து செயற்பட்டு வரும் பல முக்கியஸ்தர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் மா அதிபரின் அலுவலகப் பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி கேசரிக்கு தெரிவித்தார்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான, குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்கள் குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில், மேல் மாகாணத்தின் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த சமரசிங்கவின் மேற்பார்வையில் நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் ரணசிங்க தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணையில் நுகேகொட, மஹரகம பகுதிகளில் கடைக்கு தீ வைத்த சந்தேக நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
32 வயதான திருமணமாகாத குறித்த சந்தேக நபர் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மிக நெருக்கமானவர் என அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் உறுதியாகியிருந்தது.
இந் நிலையில் 90 நாள் விஷேட தடுப்புக் காவலின் கீழ் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் சிறப்பு பொலிஸ் குழு மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
அதன்படி குறித்த சந்தேக நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், அந்த அமைப்புடன் தொடர்பிலுள்ள மேலும் சில இனவாத கும்பல்களின் தலைவர்களுடனும் அவர் நெருக்கமான உறவினைப் பேணி வருவதும் விசாரணைகளில் உறுதியானதாகவும், கைதாகும் போது உணவகத்தில் சேவையாற்றிய குறித்த நபர் இரு வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றியவர் எனவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கலகொட அத்தே ஞானசார தேரருடன் மிக நெருங்கிய தொடர்பை பேணியுள்ள மேற்படி சந்தேக நபர் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு எதிராக கடந்த வாரத்துக்கு முதல் வாரம் பொரளை பகுதியில் இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் மிக ஆக்ரோஷமாகச் செயற்பட்டவர் என்பதும் 2014 முதல் இதுவரை பொதுபல சேனா தொடர்பு பட்ட அத்தனை சம்பவங்களிலும் இவரது பங்களிப்பு உள்ளது என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனைவிட பொதுபல சேனாவுடன் தொடர்புடைய மேலும் பல சிறிய குழுக்கள் உள்ளன. அந்த குழுக்களின் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி சந்தேக நபர் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலதிக விசாரணைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தீ வைப்பு மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகளில் பொதுபல சேனாவின் பலரது கரங்கள் பின்னணியில் இருந்தும் நேரடியாகவும் தொடர்புபட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். அதன்படி வெகு விரைவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்கள் பலரை முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள் குறித்து விசாரணை செய்யவுள்ளதாகவும் அவர்களில் அவ்வமைப்பின் பல முக்கிய தேரர்களும் உள்ளடங்குவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற சிறப்புத் தகவல்கள், கடந்த ஜூன் நான்காம் திகதி நுகேகொடை -விஜேராம பகுதியில் பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்டும் சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி குறித்த சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அதிகாலை மஹரகம நகரில் உள்ள காபட் மற்றும் லெதர் விற்பனை நிலையம் மீதும், மறு நாள் மே 23 ஆம் திகதி மஹரகம நாவின்ன பகுதியில் உள்ள ஹார்கோட் பார்மஷி மீதும், கடந்த நான்காம் திகதி விஜேராம பகுதியில் உள்ள பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையம் மீதும் நேற்று முன் தினம் அதிகாலை மஹரகம ஹைலெவல் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ எனும் பாதணி விற்பனை நிலையம் மீதும் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Good news !
ReplyDeleteAllah will help for us
ReplyDelete