முஸ்லிம் கடைகளுக்கு தீ - திட்டமிட்ட குழு செயற்படுகிறது
-MFM.Fazeer-
மஹரகம மற்றும் நுகேகொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு கடைகளுக்கு தீவைத்த சந்தேக நபர் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டார். இதனிடையே, திருகோணமலை பெரியகடை பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சேவையாற்றி வரும் 33 வயதுடைய கசுன் குமார எனும் நுகேகொடை - கங்கொடவில பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற சிறப்புத் தகவல்கள், கடந்த நான்காம் திகதி நுகேகொடை - விஜேராம பகுதியில் பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்டும் சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி குறித்த சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்ததாக குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடம், கடைகளுக்கு தீ வைத்ததன் பின்னணி, அதற்கான காரணம் தொடர்பில் தனிப்படை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் திட்டமிட்ட குழுவொன்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ள பொலிஸார், அத்தகைய திட்டமிட்ட குழுவொன்று செயற்படின் அந்த குழு, வலையமைப்பை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர விரிவான விசாரணை ஒன்றினை குற்றவியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அதிகாலை மஹரகம நகரில் உள்ள காபட் மற்றும் லெதர் விற்பனை நிலையம் மீதும், மறு நாள் மே 23 ஆம் திகதி மஹரகம நாவின்ன பகுதியில் உள்ள ஹார்கோட் பார்மஸி மீதும், கடந்த நான்காம் திகதி விஜேராம பகுதியில் உள்ள பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையம் மீதும் நேற்று முன் தினம் அதிகாலை மஹரகம ஹைலெவல் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ எனும் பாதணி விற்பனை நிலையம் மீதும் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை நேற்று நண்பகல் வரை செய்யப்பட்ட விசாரணைகளில் உறுதியாகியிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கங்கொடவில நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் தனிப்படை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, கடந்த 3 ஆம் திகதி திருகோணமலை பெரியகடை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலை மிஹிந்தபுர பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய சதீஸ் குமார் என்பவர் நேற்று திருகோணமலை துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி சித்திரவேலு சுபாசின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெரியகடை பள்ளிவாசல் தாக்குதலின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது குறித்து திருகோணமலை துறைமுக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த குழுவின் விபரம் வெளியே வராது... அதற்கு இந்த நல்லாட்சி அனுமதிக்காது...அறிக்கை மன்னன் அசாத் சாலி சொல்லுவார் சம்பந்தப்பட்ட நபரை இந்த ந(க)ல்லாட்சி கைது செய்துள்ளது. மேலதிகாரிகள் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்பார்கள்... முடிவு தெரியாது.
ReplyDelete