மஹியங்கனையில், முஸ்லிம் கடைகளுக்கு எச்சரிக்கை
ARA.Fareel
இனவாதிகளால் மஹியங்கணையில் முஸ்லிம் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மஹியங்கனை நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘ரிச் சூ பெலஸ்’ எனும் பாதணிகள் விற்பனை நிலையம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் தீ இட்டு எரிக்கப்பட்டுள்ளதையடுத்து மஹியங்கனை நகரிலுள்ள முஸ்லிம் கடை உரிமையாளர்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
தமது கடைகளும் இலக்கு வைக்கப்படலாம் என்ற பயத்தினால் பொலிஸ் பாதுகாப்பு கோரியதையடுத்து மஹியங்கனை நகருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம் கடை உரிமையாளர்கள் சிலரிடம் ‘என்ன செய்கிறோம் பாருங்கள் இங்குள்ள புடைவைக் கடைகளுக்கும் ஏனையவற்றுக்கும் இதே கதிதான் நடக்கும் என்று அச்சுறுத்தியதையடுத்து இச் சம்பவம் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவரினால் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சந்தேக நபரின் பெயர் உட்பட விபரங்கள் வழங்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று நண்பகல் பொலிஸார் சந்தேக நபரையும் முறைப்பாடு செய்தவரையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்திருந்தனர்.
சந்தேக நபர் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவினால் எச்சரிக்கப்பட்டார். இவ்வாறான கருத்துக்களினாலே வன்செயல்கள் உருவாகின்றன. இதன் பிறகு இவ்வாறான கருத்துகள் வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டார்.
முறைப்பாடு செய்திருந்த கடை உரிமையாளர் ரஹ்மத்துல்லா சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாமெனவும், இதன் பிறகு மஹியங்கனையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இதேவேளை எரியூட்டப்பட்ட ரிச் சூ உரிமையாளர் காத்தான் குடியைச் சேர்ந்த அலியார் தாஜுதீனும் நேற்று மஹியங்கனை பொலிஸுக்கு சென்றிருந்தார். இரசாயன பகுப்பாளரின் அறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்பே இது தொடர்பில் கருத்து வெளியிட முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்ட ‘ரிச் சூ பெலஸ்’ உரிமையாளர் காத்தான்குடியைச் சேர்ந்த அலியார் தாஜுதீன் மற்றும் ரோயல் ஜுவலரி நகைக்கடை உரிமையாளர் ரஹ்மத்துல்லா அகியோர் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக நேற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment