Header Ads



"இலங்கை முஸ்லிம்களை, ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை"

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் அவர்களது அண்மைக்கால சில செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது எழுவதாக பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

இதுவிடயமாக அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது...

அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள்  அமெரிக்கா போன்ற வல்லரசு உட்பட உலக நாடுகள் கண்டிக்குமளவு சென்றுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முஸ்லிம்கள் மீது அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகச் சிறிய விடயமாகவே கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறுவதன் மூலம்   முஸ்லிம்களுக்கு இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அது போன்று பிரதி பொலிஸ் மா அதிபர் ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர்கள்  ஒழிந்துள்ளார்கள் என்ற விடயத்தை அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என கூறியுள்ளார். இவரின் இக் கூற்றானது இவ்வாறு குற்றம் சாட்டுபவர்களை அவருக்கு விசாரணை செய்யும் நோக்கமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு குற்றச் சாட்டுக்களை முன் வைப்பவர்கள் முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும். அதன் பிறகே பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்தாலும் சரி  இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது சிறந்ததாகும் அவ்வாறில்லாமல் விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கதாகும்.. 

இவ்வாறான குற்றச் சாட்டுக்களை இலங்கையின் முக்கிய அரசியல் வாதிகள் முன் வைத்துள்ளனர். இலங்கையின் முக்கிய அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதானது சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விடயமல்ல.   அவ்வாறு இருக்கையில் இவ்விடயம் தொடர்பில்  அவர் இவ்வாறு கூறுவதானது இவ்விடயத்தில் அவரது  அலட்சியப்போக்கை எடுத்துகாட்டுகிறது.

இலங்கை அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி விளையாட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வு அவர்களுக்கு விளையாட்டுப்பொருளல்ல. இவர்கள் இது விடயத்தில் அவ்வாறு கூறுவதானது  அரசியல் நோக்கம் கொண்டதென்றால் இதன் பிறகான அவர்களின் எந்த பேச்சையும் நம்பக்கூடாதென இவ் அறிவிப்பை விடுத்த பிரதி பொலிஸ் மா அதிபர் மேலுமொரு அறிவிப்பையும் விடுக்க வேண்டும்.

பொலிசார் ஞானசார தேரர் தொடர்பில் பொது மக்களிடம் உதவியை நாடினார்கள். நீதி அமைச்சர் விஜய தாசபக்ஸவின் நெருங்கிய ஒருவராக தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் ஞானசார தேரரின் பின்னால் நீதி அமைச்சர் விஜய தாசபக்ஸ உள்ளார் என்ற விடயத்தை பகிரங்கமாக கூறியும் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி என்றால் எதற்காக பொலிசார் மக்களை நாடினார்கள்?

இலங்கையில் நீதியை நிலை நாட்ட வேண்டிய இவர்கள் இவ்வாறு தங்களது பேச்சுக்களை அமைத்திருப்பதானது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்பதை எடுத்து காட்டுகிறது.

No comments

Powered by Blogger.