சவூதிக்கு 2 தீவுகளைக் கொடுக்கிறது எகிப்து
எகிப்து தனது இறைமை கொண்ட இரு தீவுகளை சவூதி அரேபியாவுக்கு வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி மன்னர் சல்மான 2016இல் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டபோது பெரும்பாலும் மனிதர் வாழாத செங்கடலில் உள்ள டைரான் மற்றும் சனபி தீவுகளை சவூதிக்கு வழங்க எகிப்து இணங்கியது.
இந்த திட்டம் எகிப்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியதோடு சவூதியின் உதவிகளை பெறுவதற்கு ஜனாதிபதி தீவுகளை விற்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த திட்டம் கடந்த ஓர் ஆண்டாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்தது. எனினும் இது தனது அதிகார எல்லைக்குள் இருப்பதாக பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட ஜனாதிபதியின் கையொப்பம் மாத்திரமே தேவைப்படுகிறது.
எனினும் பாராளுமன்ற அங்கீகாரத்தை அடுத்து தலைநகர் கெய்ரோவில் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதோடு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தீவுகள் எப்போது சவூதியின் உரிமையுடையது என்றும் அதனை பாதுகாக்க சவூதியின் கோரிக்கைக்கு இணங்க 1950இல் எகிப்து துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment