முஸ்லிம்முக்குச் சொந்தமான, தேயிலைத் தொழிற்சாலை தீ - 13 கோடி நஷ்டம்
நாவலப்பிட்டி, ஹபுகஸ்தலாவை பிரதான வீதியில் இயங்கிவந்த முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தொழிற்சாலையின் மின் அடுப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கினாலே பெரும்பாலும் தீ ஏற்பட்டிருக்கலாம் என தேயிலைத் தொழிற்சாலையின் உரிமையாளரின் சகோதரர் தாஹா உடையார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதனால் தொழிற்சாலை இயந்திரங்கள் முற்றாக சேதமுற்றுள்ளதாகவும் சுமார் 13 கோடி ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் சி.சி.ரி.வி. கமெரா பொருத்தப்பட்டிருந்தாலும் அதன் தரவுக் களஞ்சியம் தொழிற்சாலைக்கு உட்புறமாக இருந்ததால் கமெரா பதிவுகளும் தீயில் எரிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவத்தைப் பற்றி தொழிற்சாலையின் உரிமையாளரின் சகோதரர் தாஹா உடையார் மேலும் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவுவதை பாதுகாப்பு உத்தியோகத்தரே முதலில் கண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தொழிற்சாலைக்குள்ளிருந்து தீ பரவுவதைக் கண்டதும் எங்களுக்கும் தொழிற்சாலை முகாமையாளருக்கும் அறிவித்தார். தீயணைப்புப் பிரிவுக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது.
நாவலப்பிட்டியில் தீயணைப்புப் பிரிவு இன்மையால் கண்டி நகரில் இயங்கிவரும் தீயணைப்புப் பிரிவினரே கடமைக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே தொழிற்சாலையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து விட்டது.
மின் அடுப்பிலிருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று 90 வீதம் நம்புகிறோம். பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். அவர்களது அறிக்கையின் பின்பே இதற்கான காரணத்தை அறிய முடியும் என்றார்.
ARA.Fareel
நம்பிட்டோடோம்ம்டாடா!!??!!
ReplyDelete