Header Ads



மலேசியா விமானத்தில் அடாவடி செய்த இலங்கையரின் விபரம் வெளியாகியது - 10 வருடம் கம்பி எண்ண வாய்ப்பு


அவுஸ்திரேலியாவிலிருந்து மலேசியா சென்ற விமானத்தில் இலங்கையர் ஒருவர் ரகளை செய்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மலேசியா எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அவர் வெடிகுண்டு புரளியை கிளப்பியதோடு விமானிகளின் அறைக்குள் நுழைய முயற்சித்திருந்தார்.

ரகளை செய்த இலங்கையர் குறித்த விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அவர் மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் விமானத்தில் விமான டிக்கடினை கொள்வனவு செய்திருப்பார் என நம்பப்படுகின்றது. பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்”.. என விக்டோரியா மாநில தலைமை பொலிஸ் அதிகாரி Graham Ashton ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஏயார்லைன்ஸ் விமானம் மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூருக்கு பயணித்து கொண்டிருந்த போது, குறித்த இலங்கையர் திடீரென கூச்சலிட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் பல பயணிகள் இணைந்து அந்த இலங்கையரை கீழே தள்ளி கட்டி வைத்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸ் பிரிவின் ஆயுதமேந்திய அதிகாரிகள் விமானத்தில் நுழைந்து, குறித்த இலங்கையரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் மெல்போர்ன் புறநகரான Dandenong பகுதியில் வசித்து வருகின்றார். அவர் ஒரு சமையல் நிபுணர் கற்கை நெறிகளை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய போதும், ஐபோனை விடவும் பெரிய அளவிலான ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றையே குறித்த நபர் வைத்திருந்தார் என Ashton குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவம் ஆரம்பத்தில் தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருதப்பட்டது. எனினும் அதுவொரு மன ரீதியான பிரச்சினை காரணமாக இடம்பெற்ற சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத குறித்த இலங்கையர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் 10 வருட சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.