ஜனாதிபதியின் வர்த்தமானியை, முழுமையாக வாபஸ் பெறத் தேவையில்லை - SLMC
ARA.Fareel
ஜனாதிபதியின் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள், விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளதேயன்றி முற்றுமுழுதாக வர்த்தமானி பிரகடனம் வாபஸ் பெறப்பட வேண்டுமென்பதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்.
மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘முசலி பிரதேசத்தில் சுமார் 29 ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் அவர்களது சனத்தொகை அதிகரிப்புக் கேற்ப காணிகள் ஒதுக்கப்பட வேண்டும். அண்மையில் நாம் கள விஜயமொன்றினையும் மேற்கொண்டோம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சு திணைக்களங்களின் உயரதிகாரிகளுடன் முசலி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடலொன்றினையும் நடத்தினார். கள விஜயம் மற்றும் கலந்துரையாடலையடுத்து அரச உயரதிகாரிகள் அறிக்கையொன்றினை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்கள்.
அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஜனாதிபதியே இவ்விவகாரத்தில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வார்.
முசலி பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
Post a Comment