முஸ்லிம் காங்கிரசின் சொத்தை அபகரித்ததாக, நஸீர் அகமட்டுக்கு எதிராக வழக்கு
-MFM.Fazeer-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான 11.2 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த சொத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டுக்கு சொந்தமானது என கருதப்படும் தனியார் நிறுவனம் ஒன்று மோசடியான முறையில் அபகரித்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஊடகவியலாளர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே பொலிஸார் நேற்று பீ அறிக்கை ஒன்றூடாக விடயத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கானது நேற்று கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, பொலிஸில் முறைப்பாடு செய்த ஊடகவியலாளர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன மற்றும் சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான சொத்தின் உறுதியானது மிகத் திட்டமிட்டு மோசடியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு, குறித்த தனியார் நிறுவனத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணியில் மு.கா. உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் இருப்பதாக தாம் அறிந்து கொண்டதாகவும் இதன் போது சட்டத்தரணிகள் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
குறித்த சொத்தின் உறுதியானது சாட்சியாளர்கள் மாற்றப்பட்டு, பெறுமதி குறைத்து மதிப்பிடப்பட்டு, அரசுக்கான முத்திரைக் கட்டணம் கூட செலுத்தப்படாது அரசையும், மு.கா.வையும் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
இதன் போது, குறித்த சொத்தின் உறுதியினை எழுதிய நொத்தாரிஸிடம் விசாரணை செய்யப்பட்டதா என நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மன்றில் ஆஜராகியிருந்த மோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரி, இன்னும் வாக்குமூலம் பெறப்படவில்லை எனவும் வங்கி உள்ளிட்ட சில ஆவணங்களைப் பெற வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து குறித்த ஆவணங்கள் அனைத்தையும் பெற்று உடன் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்க நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதுடன் அவ்வறிக்கையின் பின்னர் வழக்குத் திகதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.
Post a Comment