சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு மேலும் பலப்பட வேண்டும் - நவாஸ் ஷரீப்
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நேற்று இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே, பாகிஸ்தான் பிரதமர்,இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்காக இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் திருப்தி அளிக்கின்றன. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் ஆசிப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்.ஜெனரல் நசார் ஜன்ஜூவா ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வாவை, ராவல்பிண்டியில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
இதன்போது தீவிரவாதத்துக்கு எதிரான போரின் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் அளித்து வந்த தொடர் ஆதரவுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி நன்றியைத் தெரிவித்தார்.
Post a Comment