சியாரங்களை தகர்க்கும் முயற்சி, முஸ்லிம்களின் வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சி...!!
-M.M.M. Noorul Haq-
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிப்பதில் திட்டமிட்ட செயற்பாடுகள் நடந்துவருவதென்பது மறுக்க முடியாத ஒர் அம்சமாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பூர்வீகத் தடயத்தில் மிகுந்த தொன்மைக்குரிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலடித்தடம் பதிந்திருக்கின்ற பாவாதமலை அடையாளத்தை அழிப்பதிலும் அது முஸ்லிம்களுக்குரியதல்ல என்பதை நிலைநாட்டுவதிலும் சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகள் பல்வேறு முனைப்புக்களில் திட்டமிட்டு செயலாற்றி, அது பௌத்தர்களுடைய அடையாளம் மாத்திரம் என்ற பரப்புரையையும் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இன்னொரு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத் தடயங்களான சியாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்வும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இதனோர் அம்சமாகவே அண்மையில் காலிக் கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்க் சாலி வலியுல்லாஹ் சியாரத்தின் பாதுகாப்பு மதில் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிங்கள – பௌத்த ஆதிக்க மனோபாவமுடைய சிங்கள காடையர்களால் அல்லது முஸ்லிம்களில் ஒரு பகுதியினரால் இச்செயற்பாடு அரங்கேற்றப்பட்டிருக்கக்கூடும். இவர்களின் எவர்களானாலும் இச்செயற்பாடு மிகுந்த கண்டிப்புக்குரிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இவ்வாறான ஈனச் செயல்கள் முஸ்லிம் அல்லாதவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றதென்றால், அது நமது வரலாற்றுத் தடயத்தை இல்லாதொழிப்பதன் ஓர் இயங்கியலை நோக்கிய நகர்வாக அமைகின்றது. சியாரங்களில் இருக்கக்கூடிய உண்டியலை உடைத்து அதற்குள் இருக்கின்ற பணங்களைக் கொள்ளையிட்டுச் செல்வதென்பது வேறொரு தீய நோக்கிலான செயற்பாடாகப் பார்க்க முடியும். அவ்வாறின்றி சியாரங்களின் தொன்மையை பறைசாற்றக்கூடிய சுற்று மதில்களையோ அல்லது சியாரத்தின் மேற்பரப்பில் கட்டப்பட்டிருக்கின்ற கட்டடங்களையோ சேதப்படுத்துதல் என்பது வரலாற்றுத் தொன்மையை அழித்துவிடும் திட்டமிட்ட ஒரு செயற்பாட்டோடு தொடர்புபட்டதாகும்.
முஸ்லிம்களினால் சியாரங்கள் தகர்க்கப்படுகின்ற சம்பவங்கள் நடைபெற்ற வரலாற்றையும் நாம் அவதானிக்கலாம். இங்கு அவர்கள் உடைப்பதற்கு சொல்லப்படுகின்ற காரணம் சியாரம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றென்றும் அங்கு அந்நிய மத வழிபாட்டுச் செயற்பாட்டுக்குச் சமனான கிரியைகள் நடைபெறுவது கூடாதென்ற அடிப்படையிலாகும்.
சியார முறைமை என்பது முஸ்லிம்களிடையே ஆகுமென்றும், ஆகாதென்றும் இரண்டு விதமான கருத்தாடல்கள் இருந்த போதிலும் அதற்கப்பால் சியாரம் என்கின்ற அம்சம் முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயத்தை மற்றும் தொன்மையை பறைசாற்றுவதற்கு வலுவானதொரு ஆதாரமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏனென்றால் சியாரத்தின் நீளம், அங்கு கட்டப்பட்டிருக்கின்ற கட்டடத்தொன்மை என்பனவெல்லாம் நமது வாழ்காலத்தை பறைசாற்றவும் உறுதிப்படுத்தவும் இன்றியமையாத அம்சங்களாக இருக்கின்றன. அந்த வகையில் முஸ்லிம்களின் வரலாற்றை எழுதுவதற்கும் பேசுவதற்கும் மூலகங்களாகக் கூட அவை அமைகின்றன.
உதாரணமாக அண்மையில் உடைக்கப்பட்ட காலிக் கோட்டை சியாரம் என்பது ஒல்லாந்தர்கள் காலியில் கோட்டையை நிர்மாணிப்பதற்கு முன்பிருந்தே இந்த இடத்தில் சியாரமும் அதனை அண்மித்த பகுதியில் சுத்தமான குடிநீர்க் கிணறும் காணப்படுகின்றன. ஆக இந்த சியாரத்தை தகர்ப்பதென்பது அல்லது அதனோடு அண்டிய கட்டடங்களை சிதைப்பதென்பது குறைந்தபட்சம் சுமார் 800 வருடகால தொன்மையை நாம் இழப்பதற்கு வழிவகுக்கின்றன.
இந்த அடிப்படையில் சியாரத்தின் சுற்றுமதில் நாசப்படுத்தப்பட்டமை முஸ்லிம்களின் சிலரினால் மேற்கொள்ளப்பட்டாலும் சரி அல்லது சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளானாலும் சரி நமது தொன்மையைத் தொலைப்பதற்கு திட்டமிட்டுச் செய்கின்ற ஒரு அநீதியாகவே இதனை நோக்க வேண்டியுமுள்ளது. எனவே இலங்கையில் காணப்படுகின்ற பாவாதமலையில் உள்ள ஆதம்(அலை) அவர்களின் பாதச்சுவடு, நாற்பது முழம் அதாவது அறுபது அடி நீளமுடைய சியாரங்கள் மற்றும் சாதாரண நீளமுடைய சியாரங்கள், தொன்மையான பள்ளிவாசல்கள் போன்றவைகளின் தடயங்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை நிறுவுவதில் பாரிய பங்களிப்பை நல்கக்கூடியவைகளாக இருந்து வருவதை நாம் சிந்திக்கவேண்டும்.
வரலாறு இல்லாத ஒரு சமூகம் விரைவாக தங்களது தொன்மைகளை இழந்து நாடோடிகளாக அல்லது பரதேசிகளாக அடையாளப்படுத்துவதிலிருந்து விடுபட முடியாத இக்கட்டைச் சந்திக்க நேரிடும். அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களும் ஆகிவிடக் கூடாதென்கின்ற கவனம் நமக்கு இன்று முக்கியப்படுகின்றது. இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் வெறுமனே வந்தேறு குடிகளாகவும் இந்நாட்டுக்கு அந்நியவர்களாகவும் சித்திரிக்கப்பட்டு நம்மை குடிபெயர்ந்து செல்ல வேண்டுமென்று சிங்கள பேரினவாதிகள் அச்சுறுத்துகின்ற காலகட்டத்தில் நமது வரலாற்றை புடம்போட்டு வைக்கக்கூடிய ஆதாரச்சான்றுகளை மாற்று மதத்தினர்கள்தான் அழிப்பதற்கு கங்கனம் கட்டுகின்றனர். நம்மவர்களில் ஒரு பகுதியினரின் செயற்பாடு இதற்கு இசைந்து செல்வதென்பது ஒரு விவேகத்தின் வழிமுறை அல்ல.
பேரினவாத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையை இல்லாமல் செய்வதற்கு எடுத்துவருகின்ற எத்தனிப்புக்கள் முஸ்லிம்களை இந்த நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்டிராதவர்கள் என்று காட்ட எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும். இதற்கு ஒத்ததாக நம்மவர்களில் ஒரு பகுதியினர்களும் சியாரங்களைத் தகர்க்க கிளம்பியிருப்பதும், அதற்காக பிரசாரம் செய்வதும் நம்முடைய வரலாற்றை சிதைத்து குறைத்து மதிப்பிடுவதற்கு ஆதிக்க சக்திகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும். இதிலிருந்து முற்றாக நம்மவர்கள் தவிர்ந்து நடப்பதே நமது பூர்விவீக வரலாற்றுக்கு செய்யும் உபகாரமாகும்.
இது எல்லாம் ஒரு அடையாலமா.... 1000 வந்தாலும் உங்கள திருத்த முடியாது..
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களெல்லாம் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்று 1000 வருடங்களுக்குப் பின்னால் வரும் முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள இம்முறையினால் முடியாதுதானே! அதுதான் "இது எல்லாம் ஒரு அடையாலமா" என்று கேட்கிறீர்களாக்கும்.
ReplyDeleteWell said NGB MAAZ,
ReplyDelete