Header Ads



மீண்டெழுந்தார் மகிந்த, ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிர முயற்சி

ஏற்ற சபதத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மகிந்த அணியினர். இம்முறை மே தினக் கூட்டத்தில் காலி முகத்திடலை மறைக்கும் அளவிற்கு கூட்டம் கூடும் என்றும் எமது பலத்தை நிரூபிப்போம் என்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் சபதம் எடுத்திருந்தார்கள். அந்தச் சபதத்தை மிக வெற்றி கரமாக நிரூபித்துக் காட்டியும் இருக்கிறார்கள். இது வெறுமனே மே தினக் கூட்டமாக கருதிவிட முடியாது.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அரசியல் கட்சிகள் கூட்டும் மேதினக் கூட்டமானது ஒடுக்கப்படும் பாட்டாளி மக்களின் குரலாக ஒலிக்கிறதோ இல்லையோ, அவை அரசியல் கட்சிகளின் செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.

அது தான் இம்முறை நடந்த மே தினக் கூட்டத்திலும் நடந்திருக்கிறது. காலி முகத்திடலில் கூடிய கூட்டமும் அதைத் தான் புடம்போட்டுக் காட்டியிருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சரிவு என்பது அவர் மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களும் எதிர் பார்த்திருக்கவில்லை. அதேபோன்று மைத்திரிபால சிறிசேன தரப்பினரும் தாம் வெற்றி பெறுவோம் என்னும் சந்தேகத்தில் தான் இருந்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு எவருமே எதிர்பார்க்க முடியாத அந்த மாற்றம், எல்லாவற்றையும் தலைகீழாகப் தூக்கிப்போட்டது. குறிப்பாக இலங்கை போர்க் குற்ற விசாரணை என்பது தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நினைத்திருக்கையில், சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று எதிர் பார்க்கையில், அவை தவிடு பொடியாக்கப்பட்டன.

நேற்றைய தினம் மே தினத்திற்கு கூடிய கூட்டம் சாதாரண பாடத்தைச் சொல்லிச் செல்லவில்ல. அது மகிந்த ராஜபக்சவின் எழுச்சியை பறைசாற்றி நிற்கிறது.

தேர்தல் தோல்வி என்பது அரசியல்வாதிகளுக்கு புதிதானவை அல்ல.  சிறிது கால ஓய்விற்குப் பின்னர் கிராமங்கள், விகாரைகள், ஆலயங்கள் என்று பழைய அரசியல் பாணியினைக் கையில் எடுத்திருந்தார். இவை தவிர, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் மைத்திரி அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளை அரசியல் பழிவாங்கல்கள் என்று மிக லாபகமாக சிங்கள மக்களிடத்தே கொண்டு சேர்த்தார்.

புலிகளை அழித்து, நாட்டை மீட்டெடுத்த எனக்கும், எமது படை வீரர்களுக்கும் இந்த அரசாங்கம் கொடுக்கும் பரிசு இது. நாட்டிற்காக தியாகம் செய்த எம்மை இன்று பெரும் இடர்பாட்டிற்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்கின்றார்கள் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இது அவருக்குச் சார்பான ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்பத் சாதாரண ஏழை கிராம மக்களிடம் பரப்பட்டது. மே தினக் கூட்டத்திற்கு வந்தவர்கள் கூட நகரத்தினரைக் காட்டிலும் கிராமப் புற மக்கள் என்பது தான் கணிப்பாக இருக்கிறது. ஆக, மகிந்த ராஜபக்சவின் அதி முக்கியமான செல்வாக்கு என்பது ஏழைக் கிராமமட்ட மக்களிடத்தே இன்னமும் சிதையாமல் இருக்கின்றது என்பதனை இந்த மேதினக் கூட்டம் பறைசாற்றி நிற்கிறது.

இது மாத்திரம் காரணமல்லாது, மைத்திரி ரணில் அரசின் மீது பல்வேறு தரப்பினரும் அதிருப்தியி்ல இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் அமைப்பு விவகாரம், சமஷ்டி, கூட்டமைப்போடு ரணில், மைத்திரியி்ன் தொடர்பு, கூட்டமைப்பை எதிர்க் கட்சியாக மாற்றியமை போன்ற இன்னோரென்ன விடயங்களும் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. அது மகிந்தவிற்கு சாதகமாகியிருக்கிறது.

எனவே, மே தினக் கூட்டம் என்பது தனியே பொதுக் கூட்டம் என்று சொல்விட்டுக் கடந்து செல்லமுடியாது. அது மகிந்த ராஜபக்சவின் எழுச்சியையும், மீள்ச்சியையும் புடம்போட்டுக் காட்டி நிற்கின்றது. இன்றைய அரசாங்கத்தின் மீது தென்னகத்தின் பெரும்பான்மையானவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச குடும்பத்தோடு இறங்க வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே நாங்கள் தவறுகளில் இருந்து மீண்டு, இந்த நாட்டை சரியான பாதையில் கொண் சேல்வோம் என்று குறிப்பிட்டு இருந்தது மகிந்த தரப்பு. மக்களின் அடிமனதை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

அதற்கான பேரம் பேசுதல்களும் நடந்து கொண்டிருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, மகிந்த ராஜபக்ச தன்னுடைய வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. இது நாட்டிற்கு எந்தளவிற்கு சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பதை அடுத்த சில ஆண்டுகள் உறுதிப்படுத்தும்.

No comments

Powered by Blogger.