முசலி மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளினால் ஏமாற்றம், மோடிக்காக நிறுத்தப்பட்ட போராட்டம்
-விடிவெள்ளி-
மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கமான முடிவொன்று பெற்றுத்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டும் அப்பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் இடம்பெறவில்லை. எனினும் இப்பேச்சுவார்த்தை நாளைய தினம் -16- இடம்பெறும் என சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் முசலி மக்கள் சில தலைமைகளினால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாக பிரதேச மக்களும் சில அரசியல்வாதிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் 13 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்ர்களான பைஸர் முஸ்தபா, ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அசாத்சாலி உள்ளிட்டோரால் உறுதியளித்ததையடுத்ததே மறிச்சுக்கட்டியில் 44 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்தனர்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள கடந்த 10 ஆம் திகதி வருகை தரவிருந்த நிலையிலே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனத்தில் உள்ள தவறுகளைத் திருத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் கவனயீர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி, முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்தே போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அத்தோடு அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஹெலிெகாப்டரில் வில்பத்துவுக்குச் சென்று, தாம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விபரங்களை வெளியிட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொண்டனர். இந்தப் போராட்ட நிறுத்தம் நரேந்திர மோடியின் வருகையின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அஸ்வர் குற்றச்சாட்டு
கடந்த 13 ஆம் திகதி திட்டமிட்டபடி மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படாமை குறித்து முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கருத்து தெரிவிக்கையில்;
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையையடுத்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை மூடி மறைப்பதற்காகவே நிறுத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வர்த்தமானி பிரகடன விவகாரம் உடனடியாக தீர்க்கப்படாமல் அதற்கென ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டால் தீர்வுக்கு நீண்டகாலம் செல்லும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது ஆத்திரம் கொள்வார்கள். இவ்விவகாரத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சிகள் பாராட்டத்தக்கன. அவரது முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
இதேவேளை, மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே, 2014 ஆம் ஆண்டு மரிக்கார் தீவு மக்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது. அதற்கு இதுவரையிலும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் தற்போதும் மறிச்சுக்கட்டியில் இடம்பெற்ற போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். மக்களுக்கு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையூடாக தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த தினத்தில் நிறைவேற்றப்படவில்லை. காலதாமம் எமக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. எனினும் நாளை பேச்சுவார்த்தை இடம்பெறும் என கூறப்படுகின்றது. அதன்மூலம் தீர்வொன்று பெற்றுத்தரப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
Post a Comment