ரத்த தானம், செய்பவருக்கு என்ன லாபம்..?
-குங்குமம் டாக்டர்-
‘ரத்த தானம் பெறுகிறவருக்குப் பலநன்மைகள் இருப்பது தெரியும். தானம் செய்கிறவரது உடல்நலத்துக்கும் நல்லது என்று சொல்கிறார்களே... அப்படி என்ன நன்மை இருக்கிறது ரத்த தானம் செய்வதில்?ரத்த இயல் சிறப்பு மருத்துவர் ஜோஸ்னா கோடாட்டிக்கு இந்தக் கேள்வி.‘‘18 வயதில் இருந்து 65 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவருமே ரத்ததானம் செய்யலாம்.
மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற மற்றவர்களைப் பாதிக்கும் நோய்களை உடையவர் கண்டிப்பாக ரத்த தானம் செய்யக்கூடாது. அது மட்டுமில்லாமல் ரத்த அழுத்தம், நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு உடையவர்கள், 45 கிலோவுக்குக் குறைவாக எடை கொண்டவர்கள், விரதம் மேற்கொள்பவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் ஆகியோரும் ரத்த தானம் செய்யக்கூடாது.
தானம் செய்கிறவருக்கு தன்னுடைய உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். எனவே, பிறருக்குபாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறைபாடுகள் தங்களுக்கு இருப்பது தெரிந்தால் ரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று நல்ல மனதுடன் ரத்த தானம் கொடுப்பதால் உளவியல் ரீதியாகவே அவர் மனமகிழ்வையும், ஆத்ம திருப்தியையும் பெற்றுவிடுவார். இதனால்தான் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்பட்டாலும் தானம் கொடுக்கும்போது தலைசுற்றலோ, மயக்கமோ வருவதில்லை.
இதேபோல ஒருவருடைய உடலில் 120 நாட்களுக்கு ஒருமுறை புதிய ரத்தம் உருவாகும். ஆனால், ரத்த தானம் செய்யும்போது 3 அல்லது 5 நாட்களுக்குள் புதிய ரத்தம் உருவாகிவிடும். இதன்மூலம் ஆற்றல் கொண்ட புதிய உயிரணுக்களும் தோன்றும். உடல் ஆரோக்கியத்துக்கு இது மிகவும் நல்லது. புது ரத்தம் ஊறும் என்று மக்கள் பேச்சுவழக்கில் கூறுவது இதைத்தான்’’ என்கிறார்.
Post a Comment