விஷமருந்தியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின், அவரது வீட்டுக்குச்சென்று திருடிய பெண்
(எஸ்.கே.)
கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தியுற்று விஷமருந்திய பெண்ணை வைத்தியசாலையில் அனுதிக்க உதவிய அயல் வீட்டுப் பெண் ஒருவர், விஷமருந்திய பெண் இறந்து விடுவார் என நினைத்து அவரது வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து அலுமாரியிலுள்ள தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷமருந்திய 40 வயதான பெண் பூரண சுகமடைந்து வீடு திரும்பியபோது தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விஷமருந்திய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவிய அலவ்வ கொரொக்கல்தெனியவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விஷமருந்திய பெண் தமக்கு உதவும்படி கூச்சலிட்டதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான ஆடைகளை எடுக்க அலுமாரியைத் திறந்தபோது தங்க ஆபரணங்களை கண்டு கொண்ட பின்னனர், விஷமருந்திய பெண் வைத்தியசாலையில் இறந்துவிடுவார் என நினைத்து இரகசியமாக அவரது வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியிலிருந்த தங்க ஆபரணங்களை எடுத்துக் கொண்டதாக அவர் பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருடிய தங்க ஆபரணங்களில் சிலவற்றை அலவ்வ நகரிலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்து தனது கடன்களை மீளச் செலுத்தியுள்ளதாகவும் எஞ்சியிருந்த தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment