Header Ads



முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும்


கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மதத் தலங்களும், வர்த்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செலவராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து இன்று (23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையை ஓர் முழுமையான சிங்கள பௌத்த தீவாக மாற்றியமைத்தல் என்ற மகாவம்சத்தின் அடிப்படையிலான பேரினவாத கனவை நனவாக்க இந்த நாட்டின் அரசியல் ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் முழுமையாகச் சிங்கள பௌத்தர்களின் கைகளிலிருக்க வேண்டும் என்பது பேரினவாதிகளின் எதிர்பார்ப்பு.

தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியும், பொருளாதார பலமும் இலங்கை அரசினால் இன அழிப்பு யுத்தமொன்றின் மூலம் சிதைத்து அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாகப் பிரமிக்கத்தக்களவில் முன்னேறியிருக்கிறார்கள் என்ற விடயம் பேரினவாதிகளின் கனவுக்கு இடையூறாக அமைவதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தற்போது முஸ்லிம் மக்கள் பேரினவாதிகளால் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்துத் தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. சில வருடங்களுக்கு முன்னர் தமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மாணங்களை எதிர்த்தும், UN, USA, UK தலையீடுகளை எதிர்த்தும் முஸ்ஸிம்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு சென்று மகிந்தவுக்கு ஆதரவு திரட்டினார்கள். மகிந்தவுக்கு முதுகு சொறிய எப்படியெல்லாம் பாடுபட்டார்கள்.

    இப்போ, தமக்கு எதிராக தினமும் நடக்கும் அநீயாயங்களை எதிர்த்து ஒரு ஊர்வலம்/கர்தாள் செய்ய பயப்படும் நிலை.

    சில வருடங்களுக்குள் எப்படி இந்த மாற்றம்.

    ReplyDelete

Powered by Blogger.