Header Ads



ராஜபக்ஷவினருக்கு ஒரு சட்டம், கீதாவிற்கு வேறு சட்டமா..? பாராளுமன்றத்தில் கேள்வி

-ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்-

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளன. அதேபோன்று மத்திய வங்கியின் முன்னாள் அளுநர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையின் நோட்டில் கையொப்பமிட்டார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ராஜபக்ஷவினருக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவிற்கு வேறு சட்டமா என மக்கள் விடுதலை முன்னணி எம்.பி விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சுவிட்ஸர்லாந்து நாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர் என்பதற்காக கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி அற்றவர் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் இரட்டை பிரஜாவுரிமை வைத்துள்ளனர் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். 

எனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளது. அதேபோன்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையின் நோட்டில் கைச்சாத்திட்டுள்ளார். அதேபோன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜாவுரிமையை கொண்டே அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததை கைச்சாத்திட்டார். இது போன்று பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் பாதுகாப்புசெயலாளர் ஆகியோருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளது. இவ்வாறான நிலைமையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மாத்திரம் எப்படி நீக்க முடியும்.

அப்படியாயின் ராஜபக்ஷக்களுக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவிற்கு வேறு சட்டமா? இது நியாயமா? எனவே இந்த விடயத்தில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.