ஹஜ் முகவர் சிலரின், சுயநலச் செயற்பாடு - முஸ்லிம் திணைக்களத்திற்கு பல அசௌகரியங்கள்
-ARA.Fareel-
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்தவர்களில் 5500 பேருக்கு தமது பயணத்தை உறுதி செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடிதங்களை அனுப்பியும் நேற்றுவரை 2160 பேரே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளதாக அரச ஹஜ் குழு தெரிவிக்கிறது.
ஒரு சில ஹஜ் முகவர்களும், உப முகவர்களும் போலியான பெயர் முகவரிகளில் தகவல்களை வழங்கி அதிகமான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளமையே இதற்குக் காரணம். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் 2017 பயணத்தை 25 ஆயிரம் ரூபா மீளளிக்கப்படக்கூடிய கட்டணமாகச் செலுத்தி உறுதிசெய்யுமாறு விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைத்த கடிதங்களில் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வழங்கப்பட்ட போலி விலாசங்கள் காரணமாக திணைக்களத்துக்கே திரும்பி வந்தடைந்துள்ளன.
சில ஹஜ் முகவர்களும் உப முகவர்களும் தமது சுயநலன் கருதி, மேற்கொண்ட இந்நடவடிக்கையினால் அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
இந்நிலைமையினையடுத்து ஹஜ் கடமையை மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள மேலும் 1000 விண்ணப்பதாரிகளை விண்ணப்ப வரிசைக்கிரமங்களின்படி முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஹஜ் பயணத்தை உறுதி செய்யும் படி கோரியுள்ளது. பயணத்தை உறுதி செய்பவர்களுக்கு அதற்கான கடிதங்களை அனுப்பி வைக்கவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை இவ்வருட ஹஜ் விசாவை கடவுச்சீட்டுகளில் பதிவு செய்வதற்காக கடவுச்சீட்டுகள் முன்னைய காலங்களில் போன்று ஹஜ் முகவர்கள் மூலம் சவூதி தூதுவராலயத்திற்கு சமர்ப்பிக்கப்படமாட்டாது.
ஹஜ் பயணிகளின் கடவுச்சீட்டுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலமே சவூதி தூதரகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமெனவும் ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் போன்று தாம் பயணிக்கும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் உரிமை ஹஜ்ஜாஜிகளுக்கே வழங்கப்படும். ஹஜ்ஜாஜிகள் சிறந்த சேவை வழங்கும், குறைவான கட்டணம் அறிவிடும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்து அவர்களூடாக தமது பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.
Post a Comment