வளர்த்தவரை துரத்தி, துரத்தி கொன்ற மாடு - கொம்பிலும், தலையிலும் மனித இரத்தம்
சிலாபம் இலிப்பதெனிய பிரதேச தென்னந்தோட்டம் ஒன்றின் மாட்டு வண்டியில் கட்டப்படும் மாடு ஒன்று அந்த தோட்டத்தின் காவலாளியை விரட்டிச் சென்று குத்தி தோட்டத்தினுள்ளேயே அவர் உயிரிழந்து கிடந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை அவரது சடலத்தை மீட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த தோட்டத்தின் காவலாளியாகப் பணியாற்றிய ஹெட்டிப்பொல கஹடவில பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. எம். ஜயவர்தன (63) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு மாடு முட்டி உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த நபர் குறித்த தோட்டத்தில் பணியாற்றுவதோடு அவரைக் குத்திக் கொன்ற மாடு அவராலேயே வளர்க்கப்பட்டு அவராலேயே வண்டியில் பூட்டப்பட்டு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கடும் மழை பெய்யத் தொடங்கியதால் உயிரிழந்தவர் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை மடுவத்தில் கட்டுவதற்காகச் சென்று மாட்டை பிடித்து கயிற்றினால் இழுத்துக் கொண்டு வரும் போது கோபமுற்ற மாடு காவலாளியை பாய்ந்து குத்த ஆரம்பித்துள்ளது.
இதனால் மாட்டிடமிருந்து தப்புவதற்காக காவலாளி ஓடிய போதும் துரத்திச் சென்ற மாடு அவரை நிலத்தில் வீழ்த்தி கொம்பினால் குத்தி கொலை செய்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் மாட்டின் கொம்பிலும் தலையிலும் மனித இரத்தம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காவலாளி உயிரிழந்த பின்னர் மாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளதோடு அவ்விடத்திற்கு வந்த அயலவர்கள் காவலாளியை உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதிலும் அந்நேரம் அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது. சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment