நடுவீதியில் பொலிஸார், பாதாள உலகக் குழு மோதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம்
பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள் சுற்றி வளைப்பொன்றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று சிவிலியன்களும் காயமடைந்து களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பிலியந்தலை மக்கள் வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான (4946) அபேவிக்ரம உயிரிழந்தார் எனவும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் (67055) சமிந்த காயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கேசரிக்கு தெரிவித்தார்.
இதனைவிட காயமடைந்தவர்களில் 8 வயதான சிறுமி ஒருத்தியும் 15 வயதான சிறுவன் ஒருவனும் மற்றொரு சிவிலியனும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ள நிலையில் 8 வயது சிறுமியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
சுமார் 10 கிலோ வரையிலான போதைப் பொருள் வர்த்தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் அது தொடர்பில் உடன் செயற்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிரதானியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் ஆலோசனையைப் பெற்று செயற்பட்டுள்ளது. அதன்படி அது தொடர்பிலான சுற்றிவளைப்புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையில் குழுவொன்ரு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் இக்குழுவானது சுற்றிவளைப்புக்காக பிலியந்தலையை அடைந்த போது, பிலியந்தலை மக்கள் வங்கியை அண்மித்து நடு வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் பயணித்த வாகனத்தை முந்திச் செல்வது போன்று வந்துள்ள மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ள பாதாள உலகக் குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபர்கள், பொலிஸாரின் வாகனம் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.
இதன் போது பொலிஸ் ஜீப் வண்டியை செலுத்திச் சென்றதாக நம்பப்படும் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். ஜீப்பிலிருந்த ஏனையோர் காயமடைந்துள்ளனர்.
இதனை விட இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டுள்ளது. இதன் போதே அந்த வர்த்தக நிலையம் அருகே இருந்த இரு சிறுவர்களும் மற்றைய சிவிலியனும் காயமடைந்துள்ளனர். இதனைவிட பொலிஸ் ஜீப் வண்டிக்கு மேலதிகமாக அப்பகுதியில் இருந்த மேலும் மூன்று வாகனங்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் சேதமடைந்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டினை அடுத்து உடனடியாக பாதாள உலக உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் முதலில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
(எம்.எப்.எம்.பஸீர்
Post a Comment