மஸ்ஜிதுன் நபவிக்கு அருகில், கடந்த ஆண்டு தாக்குதல் - இதுவரை 46 பேர் பிடிபட்டனர், 32 பேர் சவூதி நாட்டினர்
மதீனா புனித நகரின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட 46 பேரை சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“புனித பள்ளிவாசலின் வழிபாட்டாளர்களை இவர்கள் இலக்கு வைத்திருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக” உள்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2016இல் ஜித்தாவில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலின் பின்னணியிலும் இவர்கள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜுலையில் முஸ்லிம்களின் புனித ரமழான் மாத்தின் கடைசி தினத்தில் இந்த இரு தாக்குதல்களும் இடம்பெற்றன.
இதில் பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகளும் ஜித்தா குண்டுவெடிப்பில் இரு பொலிஸாரும் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் சவூதி நாட்டவர்கள் என்பதோடு 14 பேர் எகிப்து, பாகிஸ்தான், யெமன், ஆப்கானிஸ்தான், சூடான் மற்றும் ஜோர்தான் நாட்டவர்களாவர்.
மதீனாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் சவூதி நாட்டவர் என்பதோடு ஜத்தாவில் தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் நாட்டவர் என்று சவூதி உள்துறை அமைச்சு முன்னதாக அடையாளம் கண்டது. எனினும் சம்பவங்களுக்கு சவூதி நிர்வாகம் எந்த குழு மீதும் குற்றம் சாட்டவில்லை.
Post a Comment