Header Ads



குளிர்சாதனப் பெட்டிகளிலும் டெங்கு - 230 நோயாளர்கள் கண்டுபிடிப்பு

(ஐ. ஏ. காதிர் கான்)

மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ள 230 பேர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 470 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு  ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக, மினுவாங்கொடை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஷீ பிரியதர்ஷனீ தெரிவித்துள்ளார். 

மினுவாங்கொடை சுகாதார வைத்திய  அதிகாரிப் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவை, நெதகமுவை ஆகிய பிரதேசங்களில், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடியும் வரையிலான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவ்வாறானவர்கள் இனங்காணப்பட்டு ள்ளதாகவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார். 

இப் பிரதேசங்களிலுள்ள வீடுகள், தோட்டங்கள் என்பன கடுமையாகப் பரிசோதிக்கப்பட்டதுடன், குளிர் சாதனப் பெட்டிகளும் விசேட அவதானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள டாக்டர், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்னால் பொருத்தப்பட்டுள்ள நீர் சேரும் குவளைகளுக்குள் நுளம்புகளின் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, எந்நேரமும் வீடு, வீட்டுச் சூழல் என்பவற்றோடு, குளிர் சாதனப் பெட்டிகளையும் அடிக்கடி துப்பரவு செய்து கொண்டால், தொடர்ந்து பரவும் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து தம்மையும் தமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் டாக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.