இலங்கைக்கு வந்த மோடியின், ஹெலிகொப்டர்களுக்கு எதிராக இதுவரை 10 முறைப்பாடுகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, இலங்கைக்கு வந்திருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகொப்டர்களுக்கு எதிராக, இதுவரையிலும் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அந்த ஹெலிகள், ஹட்டன் டன்பார் மைதானத்தில், தரையிறக்கப்பட்டு ஒத்திகைபார்த்தபோது மற்றும் இந்தியப் பிரதமருடன் தரையிறக்கப்பட்டபோது, மைதானத்துக்கு அருகிலிருந்த வீடுகள் சிலவற்றின் கூரைகள் சேதமடைந்தன. இதேவேளை, மைதானத்தில் மதில் இடிந்துவிழுந்ததிலும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறான சேதங்கள் தொடர்பிலேயே, ஹட்டன் சமனலகம கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, கினிகத்ஹேன பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஊடாக, சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையை பெற்று, சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த சமனலகம கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், வீடுதிரும்பியுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment