இறக்காமத்தில் புத்தர் சிலைக்கு எதிராக, ஒன்றுபட்ட முஸ்லிம்கள்
அம்பாறை இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலையை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சி நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் ஸ்லத்திற்கு விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும் முயற்சி நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன்போது இப்பிரதேசத்தில் பதற்ற நிலை குடிகொண்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இங்கு 150 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்துவரும் அதேவேளை மாயக்கல்வி மலையை சுற்றியுள்ள காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும். சம்பவம் தெடர்பில் மேலும் தெரியவருவதாவது;
செவ்வாய்க்கிழமை மாலை இம் மலையடிவாரத்திற்குச் செல்வதற்கான வீதியும் விகாரை அமைப்பதற்கான காணியினையும் கனரக வாகனம் கொண்டு பௌத்த பிக்குகள் சிலரால் பண்படுத்தினர். இது தொடர்பில் காணிச் சொந்தக்காரர் ஒருவர் தமண பொலிஸில் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை காலை மலையடிவாரத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறவித்ததன் பின்னர் உடனடியாக பிரதேச மக்கள் மாயக்கல்வி மலையடிவாரத்திற்கு சென்று பௌத்த தேரர்களுடன் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையிலேயே அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் ஒன்றுகூடிய அனைவரும் இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயம் சென்று செயலாளர் எம்.எம். நஸீரைச் சந்தித்து நடந்த விடயங்களை ஆக்ரோசத்துடன் எடுத்துக் கூறினர். சிலை அமைந்துள்ள இடத்திற்கு பொலிஸார் செயலாளரை அழைத்தபோதும் வராத நிலை அறிந்த மக்கள் செயலாளருக்கு தங்களது கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இதேவேளை, விடயம் அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப்சம்சுதீன், இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சுகாதார அமைச்சினது இணைப்புச் செயலாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ. நைஷார் சட்டத்தரணி பாறூக் ஆகியோர் வருகை தந்து பௌத்த குருக்களுடன் தமது பிரதேச மக்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல்பொருள் பிரதேச எல்லைக்கு வெளியே தனியார் காணியில் நிர்மாணப் பணிகள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். எனினும் இதற்குரிய எல்லையை சீரான முறையில் வரையறை செய்யும் முகமாக இறக்காமம் பிரதேச செயலாளரை ஸ்தலத்தில் நின்ற அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல அழைத்த போது பிரதேச செயலாளர் வருகை தர மறுத்துவிட்டார்.
இதனையடுத்து நீதமன்றத்தின் மூலம் சமரச முடிவுக்கு வரும்வரை சகல நிர்மாணப் பணிகளும் நிறுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பௌத்த பிக்குகளை கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் சுமுக நிலை ஏற்பட்டது.
Post a Comment