முஸ்லிம் காணி ஆக்கிரமிப்பு, புத்தர் சிலை விவகாரம் - அரசியல் தலைமைகள் மெளனம்
-விடிவெள்ளி-
இறக்காமம் பிரதேச சபைக்குற்பட்ட மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணியை இனவாதிகள் அபகரிக்க முயற்சிக்கும் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் மெளனமாக இருப்பதாக பிரதேசவாசிகளால் விசனம் தெரிவிக்கப்படடுள்ளது.
இவ்விடயம் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சமூக அமைப்புகளும் உடனடியாக செயற்பட்டு இனவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை கடந்த வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும், ஸ்தலத்திற்கு விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும் முயற்சி நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் காரணமாக இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
செவ்வாய்க்கிழமை மாலை இம் மலையடிவாரத்திற்குச் செல்வதற்கான வீதியையும் விகாரை அமைப்பதற்கான காணியினையும் கனரக வாகனங்கள் மூலமாக பௌத்த பிக்குகள் முன்னின்று செப்பனிட்டுள்ளனர். இது தொடர்பில் காணிச் சொந்தக்காரர் ஒருவர் தமண பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை காலை மலையடிவாரத்தில் விகாரை நிர்மாணப் பணிகளை பிக்குகள் முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறவித்தல் விடுக்கப்பட்டதற்கிணங்க, உடனடியாக பிரதேச மக்கள் மாயக்கல்வி மலையடிவாரத்திற்கு சென்று பௌத்த தேரர்களிடம் தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.
இந் நிலையிலேயே அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்விவகாரம் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் எவ்வித கரிசனையும் செலுத்துவதாக இல்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் இது குறித்து கட்சி பேதமின்ற ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறக்காமம் மாயக்கல்லி பகுதியில் இடம்பெற்று வந்த முறுகலை அடுத்து இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு மே மாதம் 17 ஆம் திகதிவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறி இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரைக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பமான வேளையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவிருக்கும் இறக்காமம் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் முறுகலை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்தே அம்பாறை மாவட்ட மேலதிக நீதிவான் சசிகா லக்மாலி தசநாயக்க வெள்ளிக்கிழமை இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
தற்போது 24 மணி நேரமும் இப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமாதான உறவுகள் சீர்குலையும் பட்சத்தில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் பள்ளியான் செய்னுலாப்தீன், முஸ்தபா லெவ்வை, சுல்பிகார் , சரிபுத்தம்பி யூசுப், வண. அம்பேபிடிய சீலரத்ன தேரர் ஆகியோரை மே மாதம் 17 ஆம் திகதி அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இதேவேளை, அப்பிரதேசத்தி லுள்ள அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், மாணிக்கமடு கோவில் நிர்வாகம் என்பன இணைந்து தங்களது எதிர்ப் பினை வெளிப்படுத்தியுள்ளனர்..
Post a Comment