உங்கள் ஊரில் பாங்கின் ஓசை, இனிமையாக கேட்கிறதா..?
எம் சமூகத்தில் முஅத்தீன்மார்களை கண்ணியப்படுத்தாவரை, பாங்கின் ஓசையில் இனிமை இருக்காது.
உலகிலே சிறந்த ஓசை எதுவென எம்மிடம் கேட்டால் பாங்கோசை என்போம் அந்த இனிமையான ஓசை எம்மூரில் கேட்கின்றதா என கேட்டால் அதற்கான பதில் கேள்வி குறிதான்.
இன்று எமது சமூகத்தில் முஅத்தீன் மார்களை கண்ணியப்படுத்து கின்றோமோ ? சற்று சிந்தியுங்கள்.
இன்று இந்த சிறந்த பணிக்கு வருபவர்கள் யார் என பார்த்தால் பெரும்பாலும் ஏழை வயோதிபர்கள் தான் இவர்களால் இனிமையான முறையில் பாங்கு சொல்ல முடியுமா ? என்ற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்றுதான் பதில் வரும் ஒரு சிலர் இருக்கின்றனர் நன்றாக பாங்கை சொல்வார்கள் , இன்னோர் சிலர் இருக்கின்றனர் இனிமையும் ,மகிமையும் எப்படியோ சொன்னால் போதும் வேலை முடிந்துவிடும்.
இதற்கெல்லாம் காரணம் என்ன சமூகத்தில் இவர்களை கண்ணியப்படுத்துவதில்லை , சிறு தொகை ஊதியம் கொடுக்கின்றனர்.
இதனால் தான் இந்த புனிதமான பணிக்கு இனிமையான குரல் உடைய இளைஞ்சர்கள் வருவதில்லை. இன்றைய எம் சமூகத்தில் பள்ளி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு என்னவெனில் முஅத்தீன்மார்கள் இனிமையான குரலில் பாங்கை சொல்லாட்டியும் பரவாயில்லை பள்ளி வேலைகளை மாத்திரம் பார்த்தால் போதும் உதாரணமாக பலவற்றை எடுத்து கொள்ளலாம் ஒன்று இரண்டை சொல்கின்றேன்.
சந்தா அறவிடுதல் ,பள்ளிகளை சுத்தப்படுத்துதல் இவற்றை செய்தாலே போதும் பாங்கு ஓசையை பற்றி கவலை படுவதில்லை எப்படியோ எமது பள்ளியில் பாங்கை நேரத்துக்கு சொன்னால் போதும் முஅத்தீன் நன்றாக சொல்கின்றாரா? என கவனத்தில் எடுப்பதில்லை.
அதனால் தான் இன்று வேண்டா விருப்பம் போல பாங்கை சொல்கின்றனர்.
இவர்களை ஊக்க படுத்த வேண்டும் அதை செய்ய எம் சமூகம் முன்வர வேண்டும் அவ்வாறு செய்தால் எல்லா பகுதிகளிலும் மக்கா, மதீனா போன்று இனிமையாக பாங்கு சொல்லப்படும் அதனை காதுகளால் கேட்கவே இனிமையாக இருக்கும்.
முஅத்தீன்மார்களை நாம் எவ்வாறு ஊக்க படுத்துவது ஒவ்வொரு மாவட்டத்திலும் முஅத்தீன் நலன்புரி சங்கம் உருவாக்கி வருடா வருடம் சிறந்த முஅத்தீன்களை தெரிவு செய்து கௌரவித்து பரிசுகள் ,நினைவு சின்னங்கள் வழங்கப்படவேண்டும்.
குர் ஆன் மனன போட்டி போல அதான் போட்டிகளை நாடாத்தி சிறப்பாக அதான் சொல்பவர்களை தெரிவு செய்து கௌரவித்து பரிசுகள் ,நினைவு சின்னங்கள் வழங்கப்படவேண்டும் பின்னர் அவர்களை பள்ளியில் இணைத்து கொள்ளலாம் வெற்றியாளர்கள் சிறுவர்களாக இருந்தால் ஓய்வு நேரத்தில் பள்ளிவாயலில் பாங்கு சொல்ல சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
பல வருடமாக பணி செய்து ஓய்வு பெரும் முஅத்தீன் மார்களுக்கு ஒரு தொகை பணம் பள்ளி நிர்வாகத்தால் கொடுத்து கௌரவித்து பரிசுகள் ,நினைவு சின்னங்கள் வழங்கப்படவேண்டும்.
ஊதியங்களை அதிகரிக்க வேண்டும் எம் பள்ளிவாயல்களில் தொழுவிக்கும் மௌலவியும் ,முஅத்தீனும் ஒரே மாதிரியான ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க பள்ளி நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும் இது போல பல விடயங்களை செய்து கொடுக்கலாம்.
எமது சமூகத்தில் இவ்வாறு முஅத்தீன்மார்களை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவித்து இனிமையான குரலில் அதானை கேட்க நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்..!
ஸபா ரௌஸ் கரீம்
Absolutely a smashing concept deserving a serious concern by all , masjith management in particular .
ReplyDeleteAthan n Muathins oughtto b given due place n respect .