Header Ads



சிறிலங்கா வருகிறார் மோடி

அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சிறிலங்காவில் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, ஜேர்மனி, ஸ்பெய்ன், கசாக்ஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வரும் ஜூலை மாதத்துக்குள் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, கண்டியில் இந்திய உதவியுடன் அமைக்கப்படவுள்ள பாரம்பரிய நடனப் பாடசாலைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று கூறியிருந்தார்.

ஹற்றனில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட மருத்துவமனை திறப்பு விழாவிலும் இந்தியப் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

எனினும், யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலை் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கான தனது முதலாவது பயணத்தின் போதும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.