அம்பாறை முஸ்லிம்களின் சனத்தொகையை குறைக்க சதி - மயிர்க் கூச்செறியும் சில உண்மைகள் (அட்டவணை இணைப்பு)
ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தின் அல்லது சமூகத்தின் சனத்தொகை செறிவைக் குறைப்பதற்கு ஒன்றில் இனச் சுத்திகரிப்பை அல்லது சட்டவிரோதக் குடியேற்றத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது அவர்களின் நீண்ட கால அரசியல் தந்திரோபாயமாகும். அதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் நிலத்தொடர்ச்சியை இல்லாதொழித்து அவர்களுடன் பேரினத்தை கலப்பதன் மூலம் சனத்தொகையை ஐதாக்கி, அரசியல் பலத்தை சிதைப்பது ஏகாதிபத்தியவாதிகளின் உள்நோக்கமாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பல நாடுகளில் இந்தத் தந்திரத்தை ஏகாதிபத்திய அரசுகள் மிக இலாவகமாகக் கையாண்டுள்ளன. அயர்லாந்தில் பிரிட்டன் மேற்கொண்ட குடியேற்றங்களும் போல்கனில் சோவியத் யூனியனினால் பொஸ்னியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதக் குடியேற்றங்களும் இதற்குத் தெளிவான உதாரணங்கள்.
காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிந்திய முதல் மூன்று தசாப்தங்களிலும் இலங்கை பேரினவாத அரசுகள் வடக்கு, கிழக்கில் இதுபோன்ற குடியேற்றத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டு வந்துள்ளன. அதன் மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பலமும் பேரம் பேசும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டது. நிலம் சார்ந்த பெரும் சமூக நெருக்கடியொன்றுக்குள் அவர்களைத் தள்ளியது.
கிழக்கில் முஸ்லிம்களின் சமூக பலத்தையும் அரசியல் சக்தியையும் மழுங்கச் செய்வதில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பவற்றின் பரப்பளவில் பெரியது அம்பாறை. இலங்கையின் 25 மாவட்டங்களில் நான்காவது இடத்தில் அது உள்ளது. ஏழு மாவட்டங்களை அம்பாறை மாவட்டம் எல்லைகளாகக் கொண்டிருப்பது அதன் பரந்துபட்ட நிலப்பரப்புக்கும் சமச்சீரற்ற தன்மைக்கும் தெளிவான ஆதாரமாகும்.
மொனராகலை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, பதுளை, மட்டக்களப்பு ஆகிய ஏழு மாவட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது. திருகோணமலை 2226 சதுர கி.மீ பரப்பையும், மட்டக்களப்பு 2633 சதுர கி.மீ. பரப்பையும் கொண்டிருக்கும் அதே வேளை அம்பாறையின் பரப்பு 4415 சதுர கி.மீ. ஆகும்.
1940 களுக்குப் பின்னர் இலங்கையில் அப்போது நடைமுறையிலிருந்த dro பிரிவுகள் அரசாங்க அதிபர் பிரிவுகளாக மாற்றப்பட்டன. முஸ்லிம் பிரதேச சபைகள் பெரும்பாலும் முஸ்லிம் குடியிருப்புப் பிரிவுகளாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டன. பெரும் பகுதி அரசாங்க பூமியும் நீர் நிலைகளும் சிங்கள-, தமிழ் பெரும்பான்மை கொண்ட பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. முஸ்லிம்களுக்கு சட்டபூர்வமாக அவ்வுரிமை மறுக்கப்பட்டது.
நிர்வாக அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாக இருந்ததனால் தாம் விரும்பும் இடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றவும் தற்துணிவு மூலம் அவர்களுக்கு காணி உரிமைகளை வழங்கவும் சிங்கள அதிகாரிகளுக்கு முடியுமாக இருந்தன. மாறி மாறி வந்த அரசாங்கங்களின் பிராந்திய முகவர்களாக செயற்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு உள்ள காணி பகிர்வு தொடர்பான தற்றுணிவு அதிகாரம் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அநேகர் வடக்கு, கிழக்கில் குடியேற்றப்படுவதற்கு ஏதுவாய் இருந்துள்ளது. இன்னும் இருந்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதற்கென உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ள காணிகளின் பரப்பையும் சிங்கள அரசாங்க அதிபர் பிரிவுகளில் வாழும் சனத்தொகையுடன் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டு, பிரகடனம் செய்யப்பட்டுள்ள மயிர்க் கூச்செறியும் சில உண்மைகள் நமக்கும் துலங்கும்.
இலங்கையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்பாறை. 282,484 முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 43.595% ஆகும். சிங்களவர்களின் சனத்தொகை 251018 ஆகும்.
கிட்டிய எதிர்காலத்தில் இது ஒரு பாரிய நெருடிக்கடியை ஏற்படுத்தாவிடினும் எதிர்வரும் அரை நூற்றாண்டுக்குப் பின்னரேனும் அதன் மோசமான விளைவுகளை முஸ்லிம் சமூகம் அனுபவிக்க நேரும். கொழும்பு மாவட்டம் இதற்கு தெட்டத் தெளிவான உதாரணமாகும். சனத்தொகை விதாசாரத்திற்கு ஏற்ப நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை என்பதே இங்குள்ள அடிப்படைப் பிரச்சினையாகும்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவைக் கணிப்பிட்டால் காணிப் பகிர்வில் நிகழ்ந்துள்ள பாரிய இனப்பாகுபாட்டையும் அநீதியையும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இப்படி ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். இங்குள்ள அட்டவணையிலிருந்து இவ்வுண்மைமை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
-Rauff Zain விடிவெள்ளி
Post a Comment