Header Ads



அல்லாஹ் நாடியதை, எவரால்தான் தடுக்க முடியும்..?

-சுவனப் பிரியன்-

'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' இந்து முண்ணனி இராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம். இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான்.

ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார்.

அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..

தனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான்.

படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், முஸ்லிம் நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.

பெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.

'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'

பெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா! எல்லா புகழும் இறைவனுக்கே! நாளை என் மகளை அழைத்து வந்து விடு! பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.

'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.

மறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். வேறு யாரையும் அந்த இறைவனைத் தவிர வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முஹம்மது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொன்னான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நி(க்)காஹ்வும் நடத்தப்பட்டது.

அந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’  (அல்-குர்ஆன் 3:54)

2 comments:

Powered by Blogger.