"புலி ஆட்சியில் வாழ்வை இழந்த முஸ்லிம்கள், இன்று நரி ஆட்சியில் அந்தரத்தில்"
புலி ஆட்சியில் வாழ்வை இழந்த முஸ்லிம்கள் இன்று நரி ஆட்சியில் மீண்டும் அந்தரத்தில் விடப்பட்டுள்ளார்கள் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
தமிழ் முஸ்லிம்களின் வாழ்விடங்களை காட்டுக்குரியது என்ற ஜனாதிபதி மைத்ரியின் வர்த்தமாணி அறிவித்தலை ரத்துச்செய்யக்கோரும் மறிச்சுக்கட்டியில் நடை பெற்ற சர்வமத தலைவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் முஸ்லிம் மக்களின் 98 வீதமான வாக்குகளைப்பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் முஸ்லிம்களின் முதுகில் குத்தி விட்டனர். மரத்தால் விழுந்தவனை மாடு குத்துவது போல் புலிகளால் அனைத்தையும் இழந்து மீண்டு வந்த வட மாகாண முஸ்லிம்களை நல்லாட்சி அரசு பறித்துள்ளமை மிகப்பெரிய அநியாயமாகும். அநியாயம் செய்யப்பட்ட மக்களின் பிரார்த்தனைகளுக்கு பயப்படும்படி அரசை கோருகிறோம்.
புலிகள் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட விரக்தி காரணமாக முஸ்லிம்களின் பிராத்தனை காரணமாக புலிகள் அழிக்கப்பட்டனர். அத்தகைய புலிகளை ஒழித்த வல்லமை மிக்க கடந்த அரசும் சில தவறுகள் செய்தமை காரணமாக முஸ்லிம்களின் எதிர் பிரார்த்தனை காரணமாக அந்த அரசும் வீழ்ந்தது. இப்போது இந்த அரசாங்கம் முன்னைய அரசைவிட மிக மோசமாக முஸ்லிம்களை படுகுழியில் தள்ளியுள்ளது. இந்த அரசும் அநியாயம் செய்கின்றது.
ஆகவே இந்த நாட்டின் சர்வ சமயத்தலைவர்கள் என்ற வகையில் 2012 மற்றும் 2017 வர்த்தமாணி அறிவித்தல்கள் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். அதே போல் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தாலும் வேறு சக்திகளாலும் பிடிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களினதும் முஸ்லிம்களினதும் அனைத்து நிலங்களும் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வ சமயத்தலைவர்களின் ஜனநாயக போராட்டத்தை நாடு முழுக்க தொடர்வோம் என்றார்.
Post a Comment