Header Ads



ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வரி, அறவிட அரசாங்கம் திட்டம் - அநுரகுமார கடும் எச்சரிக்கை

உழைக்கும் மக்கள் கஷ்டத்துடன் சம்பாதித்த பணத்தின் முதலீட்டு பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க கூறினார். 

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வரி அறவிட அரசாங்கம் திட்டமிடுவதாகவும், ஒரு போதும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் இன்று -11- கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறும் போது, 

ஊழியர் சேமலாப நிதியம் என்பது 1350 பில்லியன் ரூபா பணம். 2,475,000 உறுப்பினர் கணக்குகள் உள்ளன. இது அரசாங்கத்தின் நிதியல்ல. தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களினதும், முதலாளிமார்களினதும் பணமாகும். அரசாங்கத்திற்கு இதனுடன் இருக்கின்ற தொடர்பு, அந்த நிதியின் பாதுகாப்பாளர் என்பது மாத்திரமே. 

சில சந்தர்ப்பங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தைப் பயன்படுத்தி வீழ்ச்சியடைந்த நிறுவனங்களின் பங்குகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது. இதனால் நிதியத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டது. அனைத்து அரசாங்கங்களும் ஊழியர் சேமலாப நிதியத்துடன் விளையாடியது. ஊழியர் செமலாப நிதியத்திலிருந்து 10%வரி அறவிடுவதற்கு சட்டமுறை இருந்தது. எனினும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதுவரை அந்த வரியை அறவிடவில்லை. 

இந்நிலையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 14% புதிய வரியை அறவிட யோசனை முன் வைத்துள்ளார். இதன் மூலம் சேமலாப நிதியத்திற்கு 24% வரி அறிவிட முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அநுர குமார திசாநாயக்க கூறினார். 

No comments

Powered by Blogger.