மஹிந்தவை இரவு நேரத்தில், அமைச்சர்கள் சந்திக்கிறார்களா..?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் இரவில் இரகசியமாக சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 14 பேர் இவ்வாறு கடந்த இரண்டு வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்துள்ளனர்.
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்திலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும் இந்த சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
கட்சியின் சிரேஸ்ட அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இவ்வாறு மஹிந்தவை சந்தித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களினால் கட்சிக்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதியுடன் கட்சியின் உறுப்பினர்கள் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரச சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களினால் தாம் நிராகரிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக இந்த அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறு இரவில் மஹிந்தவை இரகசியமாக சந்திக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Post a Comment