Header Ads



'வாட்ஸ் அப்' பயன்படுத்துவதால், ஏற்படும் சுகாதார பாதிப்புகள்..!

தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆமாம்... வாட்ஸ்-அப் அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு WhatsAppitis என்ற பிரச்னை ஏற்படுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லட்சுமிநாதனிடம்இந்தப் புதிய பிரச்னை பற்றி கேட்டோம்...

‘‘வாட்ஸ்-அப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் கைகளில் ஏற்படும் அழற்சியையே வாட்ஸப்பைட்டிஸ் என்கிறார்கள். அதாவது, வாட்ஸ்-அப் தொடர்ந்து பயன்படுத்தும்போது விரல் எலும்புகள் மற்றும் சவ்வு பகுதியில் வலி, வீக்கம், எலும்பு தேய்மானம், விரல்களை இணைக்கிற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸப்பைட்டிஸ் என்பது அதிகரித்து வருகிற பிரச்னையாகவும் உருவாகி இருக்கிறது.

உடலின் ஒரே பகுதியில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் உண்டாகும் வலியை Repetitive strain injury என்கிறோம். வாட்ஸப்பைட்டிஸ் அந்த வகைகளில் ஒன்றுதான்.தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் டைப் செய்துகொண்டே இருக்கும்போது கையில் உள்ள Interphalangeal joint, metacarpophalangeal joint, Wrist joint போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் கட்டைவிரல் நரம்பு மற்றும் சவ்வு பலவீனமாகி வீக்கம் அடைந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

அதனால், அதிக நேரம் வாட்ஸ் -அப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள், வயதானவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் வாட்ஸ்-அப்பில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் விரல் வீக்கம், தேய்மானம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.

கம்ப்யூட்டரில் பணிபுரிகிறவர்களுக்கும் இதேபோல் அதிக உடல் சோர்வு ஏற்பட்டு கை, கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைந்து வலி உண்டாகிறது. இவர்களும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நேரத்தை அளவோடு பயன்படுத்தி, தேவையான ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கைகள் மற்றும் விரல்களில் வலி இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை, ஒத்தடம் அல்ட்ரோ தெரபி, மாத்திரைகள், கை உறை, பெல்ட் அணிவது போன்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன என்பதால் கவலை வேண்டியதில்லை.பொதுவாக, தொழில்நுட்பம் வளர்வதற்கேற்ப வேலை செய்யப் பழகிக் கொள்வதுபோல் அதற்கேற்ப நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில்லை. அதுதான் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு காரணம். அளவோடு பயன்படுத்தி, ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாண்டால் இதுபோன்ற தொந்தரவுகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.

No comments

Powered by Blogger.