“பிரதமர் ரணில்" உயிருடன் இருக்கும் போதே, இறந்ததைப் போல செயற்படுகிறார்
“தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வியாபாரத்தின் அடுத்த இலக்கு, திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பக்கம் திரும்பியுள்ளது” என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை துறைமுகத்தில், எண்ணெய்த் தாங்கிகள் 102 காணப்பட்டன. ஆனால், அதில் மூன்றுக்கு எண்ணெய் தாங்கிகள் சேதமடைந்துள்ளன. ஏனையவை முறையாக பாதுகாக்கப்பட்டன” என்றார். “பிரித்தானிய ஆட்சியின் போதுதான் இந்த எண்ணெய்த் தாங்கிகள், 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதன் போது மிக முக்கிய இடத்தில், திருகோணமலை துறைமுகம் காணப்பட்டதனால், இத்துறைமுகமே , எண்ணெய் வியாபாரத்தில் ஆசியாவின் மத்திய நிலையமாகக் காணப்பட்டது. பிரித்தானியர், 1948 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுச்செல்லும் போது, குறித்த எண்ணெய்த் தாங்கிகளை இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்காமல் சென்று விட்டனர். அதற்கு பின்னர், 1957ஆம் தான் , இலங்கை அரசாங்கம் இரண்டு இலட்சத்து 50ஆயிரம் பவுன்களை பிராத்தானிய நாட்டுக்குக் கொடுத்து இந்த எண்ணெய் தாங்கிகளை பெற்றது. அவ்வாறு ஆங்கிலேயர்களிடமிருந்து அவ்வாறு பெற்ற இந்த எண்ணெய் தாங்கிகளை, மீண்டும் விற்பனை செய்வதை, அனுமதிக்க முடியாது. இங்கு காணப்படும் ஒரு தாங்கியில் 14 மெற்றிக் தொன் எண்ணெயைக் களஞ்சியப்படுத்த முடியும். அனைத்து தாங்கிகளையும் எடுத்தால், அதில் 10 இலட்சம் மெற்றிக் தொன் எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைக்கமுடியும். கொலன்னாவை மற்றும் முத்துராஜவல களஞ்சியசாலைகளில் 4 இலட்சம் மெற்றிக் தொன் எண்ணெய் மட்டுமே, களஞ்சியப்படுத்தி வைக்கமுடியும். ஆனால், திருகோணமலையில் மாத்திரம் 10 இலட்சம் மெற்றிக் தொன் எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைக்கமுடிம். அதனால்தான், எங்களுக்கு இது முக்கியமானதொரு சொத்தாகும்” என்றார். “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை சொத்துக்களை விற்பனை செய்வதிலேயே குறியாக இருக்கின்றார் என்று எங்களுக்குத் தெரியும். இவர் இவ்வாறு நடந்துகொள்வது உயிருடன் இருக்கும் போதே, அவர், இறந்ததைப் போல செயற்படுகின்றார் என்பதற்குச் சமனானதாகும்” என்றார்.
Post a Comment