Header Ads



காஷ்மீரில் பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்கள் முடக்கம்


இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்களை முடக்க அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.

"மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த ஆணை ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த ஆணை வரும் வரை தொடரும்", என காஷ்மீரின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட"இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885" படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் கலவரத்திற்கு பிறகு தற்போது புதியதாக ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் கலவரங்களில் ஈடுபடுவது அரசாங்கத்திற்கு புதிய கவலையை உருவாக்கியுள்ளது.

மேலும் போராட்டங்கள் நடைபெறும் என்ற அச்சத்தில் அவ்வப்போது கல்லூரிகளும் மூடப்படுகின்றன. சீருடை அணிந்த பெண்கள் போலிஸாரின் மீது கல் வீசும் காட்சிகளையும் காண முடிந்தது.

இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், முதல்முறையாக சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் முடிவை எடுத்துள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் மூலம் குற்றவாளிகள் இளைஞர்களை தூண்டக்கூடும். அது நீண்ட நாட்கள் நிலவும் ஒரு கவலையாக இருப்பினும் தற்போது சூழல் கட்டுப்பாட்டை மீறி செல்வதால் தற்காலிக தடைதான் கடைசித் தீர்வாக இருந்தது" என மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.