Header Ads



1000 ஆம் நாட்களாகியும், நீதி இல்லை - அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

-ரஸ்மின் MISc

இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட பல கலவரங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அந்த வகையில் கடந்த 16.06.2014 அன்று இலங்கையின் தெற்கு, அளுத்கமை, பேருவலை பகுதி முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் ஒன்றை பேரினவாதிகள் நடத்தி முடித்தார்கள். அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்று சுமார் 1000ம் நாட்களை தாண்டி விட்ட பின்னரும் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வில்லை.

2014.06.12ம் தேதி அளுத்கம பகுதியில் ஒரு புத்த பிக்கு வந்த காரும் ஒரு முஸ்லிம் ஓட்டிவந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி, சிறிய விபத்து நடந்தது. இதனால், புத்த பிக்குவின் வாகன ஓட்டுநருக்கும் முஸ்லிம் நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் புத்த பிக்குவை அந்த முஸ்லிம் நபர் தாக்கிவிட்டதாகப் பொய் செய்தியைப் பரப்பி, பிரச்னையைத் திசைதிருப்பினார்கள். இதனால், குற்றமே செய்யாத இரண்டு முஸ்லிம்களை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தார்கள். இதைக் காரணமாக வைத்து, ‘பொதுபலசேனா’ என்ற பௌத்த பேரினவாத அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களைக் கருவறுக்கும் நோக்கில் 1,000-க்கும் மேற்பட்டவர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திரட்டினார்கள்.

முஸ்லிம்களோ, தமிழர்களோ பத்து, இருபது பேர் சேர்ந்து ஒரு சிரிய ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அப்போது அனுமதி மறுத்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கியது. சமாதானச் சூழ்நிலை சீர்கெடுவதற்கு முன்பே சுதாரித்து ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்திருந்தால்,  பிரச்னைகள் வளர்ந்து இருக்காது. பொது பல சேனாவினர் ஆர்பாட்டம் செய்வதாக அறிவித்தவுடனேயே முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தஞ்சமடைய ஆரம்பித்தார்கள். அளுத்கம தர்கா நகருக்கு மத்தியில் அமைந்துள்ள சீனவத்த பகுதியில் இருந்த பல முஸ்லிம்களின் வீடுகளை கல்வீசி தாக்கினர். அதோடு, பள்ளிவாசலில் குழுமியிருந்த முஸ்லிம்களை அருவருப்பான வசனங்களால் திட்டினார்கள். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

15-ம் தேதி மாலை 6.45 மணியளவில் அளுத்கம பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலிசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பள்ளியில் ஒன்றுகுழுமி இருந்த முஸ்லிம்களால் தங்கள் வீடு​களுக்குக்​கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதனைச் சாதமாக பயன்படுத்திய ‘பொதுபலசேனா’வின் ஆட்கள் போலீஸ்காரர்கள் இருக்கும்போதே முஸ்லிம்களின் வீடுகள் மீது கல் எறியத் தொடங்கினார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள். முஸ்லிம்கள் நடத்திவரும் கடைகளையும் பள்ளி​வாசல்களையும்கூட தீயிட்டுக் கொளுத்தினர்.

அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன்தான் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கினார்கள். அளுத்கம, தர்கா நகர், வெல்பிடிய, அதிகாரிகொட ஆகிய முஸ்லிம்களின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தினார்கள். இனவாதிகளின் தாக்குதலால் முஸ்லிம்களின் பல கோடிக்​கணக்கான ரூபாய்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டது ‘பொதுபலசேனா’ அமைப்பின் பொதுச்​செயலாளர் ஞானசார தேரர் என்பவர். ‘எந்த முஸ்லிமாவது ஒரு சிங்களன் மீது கையை வைத்தாலும், அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்’ எனப் பேசி பெரும்பான்மை மக்களின் மனத்தில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பு உணர்வை அதிகப்படுத்தினார். இவர் பேசிய பேச்சால்தான், முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து, இதுவே மிகப்பெரும் கலவரம் நடக்கவும் காரணமாகிவிட்டது.

பல கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரும்பாலான வீடுகள் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. பல பள்ளிவாசல்கள் இந்த பௌத்த மதவெறியர்களால் எரிக்கப்பட்டன. மூன்று அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தார்கள். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த வந்திருந்தால், பள்ளிகளையும் வீடுகளையும் கடைவீதிகளையும் தாக்கி அழிக்கும் அளவுக்கு ஆயுதங்களுடன் வந்திருக்க சாத்தியமே இல்லை. முஸ்லிம்களை தாக்க வேண்டும்; எமது உடைமைகளை அழிக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டே சதித்திட்டம் தீட்டியே களத்தில் இறங்கியிருந்தார்கள் கலவரக்காரர்கள்.

அளுத்கமை கலவரத்திற்கு காரணமாக அமைந்த ஞானசார தேரரின் ஆர்பாட்டத்திற்கு 2000க்கும் அதிகமான போலிசாரை பாதுகாப்புக்கு நிறுத்திய அப்போதைய அரசு. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது அதனை தடுப்பதற்கு ஆரம்பமாக போலிசாரை களமிறக்க வில்லை. மட்டுமன்றி, இறுதி நேரத்தில் களமிறக்கப்பட்ட போலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு அளுத்கமை மற்றும் பேருவலை உள்ளிட்ட பெரும்பகுதிக்கு ஊரடங்கு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது அரசாங்கம்.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தான் பெரும்பாலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம்களில் யாரும் வெளியில் வரமுடியாதவாறு ஊரடங்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்புத் துறை பார்த்துக் கொண்டது. முஸ்லிம்களை வெளியில் வரமுடியாமல் ஊரடங்கு சட்டத்தை போட்டு விட்டு கலவரக்காரர்களை சுதந்திரமாக நடமாட விட்டது பாதுகாப்புத் துறை. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாயல்கள் என்று கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் கொள்ளை அடித்ததுடன், தீ வைத்தும் எரித்தார்கள், பெற்றோல் குண்டுகளை வீசினார்கள். இதில் சுமார் 03 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு பலர் பலத்த காயத்திற்கும் ஆளானார்கள்.

3 comments:

  1. அய்யா சாமி ரஸ்மின், நீங்க இந்த சமூகத்திற்கு செய்தது போதும் சாமி, வாயை பொத்திக்கொண்டு இருந்தாலே போதும், முஸ்லிம்கள் நல்ல இருப்பாங்க நம் தாய் நாட்டிலே.

    ReplyDelete
  2. Rasmin please shout your mouth that's great help for our muslim community......we are asking dua to save from your all

    ReplyDelete
  3. ஏன் ஸ்ரிலங்க உனக்கு தொட நடுங்குதா!?

    பாதிக்க பட்டவன் உங்க அப்பா. அம்மாவா. தம்பி சகோதரர். யாரும் இல்லை தானே. நீ அப்புடித்தான் பேசுவாய்.

    ReplyDelete

Powered by Blogger.