IS பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்த்தவர், இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்
(தமிழ் மிரர்)
கேரளாவிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு ஆட்களைச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல் றஷீத் அப்துல்லா, அவரது தீவிரக் கருத்துகள் காரணமாக, இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என, இந்திய தேசிய புலனாய்வு முகவராண்மையின் குற்றச்சாட்டுப் பத்திரம் குறிப்பிட்டுள்ளது என்று, இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த நபர், கேரளாவைச் சேர்ந்த 22 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தார் என, இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அப்துல்லாவுக்கும் சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் விருந்தினர் உறவு முகாமையாளர் அர்ஷி குரேஷிக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுப் பத்திரத்தின்படி, அப்துல்லாவும் மேலும் 17 இந்தியர்களும், இலங்கையில் காணப்பட்ட இஸ்லாமியப் பாடசாலையில் வைத்து, எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களுக்குள் காணப்படும் தீய அம்சங்களைப் போரிடுவதே ஜிஹாத்; அப்பாவி மக்களுக்கெதிராகப் போரிடுவதும் கொல்வதும், ஜிஹாத் கிடையாது” என, அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலைக்குச் சென்றவர்களில் 80 பேர் இலங்கையர் எனவும் 18 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது. இவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்வதற்காக இந்தியாவுக்குச் செல்ல முன்பு, குர்ஆன் பற்றிய மேலதிக அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவே, இலங்கைக்குச் சென்றுள்ளனர்.
Post a Comment