கடல் கொள்ளையர்களும், இராஜதந்திரமும் - படிக்கவேண்டிய பாடங்களும்
சோமாலியா கடல் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை மீட்டமையானது அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றி மாத்திரமன்றி மாறாக இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றியாகும். இதனையிட்டு அமெரிக்காவிற்கு விசேட நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களின் விடுதலை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
சோமாலிய கடல் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை மீட்டமையானது அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியின் அடையாளமாகும். ஹரிஸ் 13 என்ற எண்ணெய் கப்பலை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தி சென்ற சந்தர்ப்பத்திலிருந்து தேவையான அனைத்து நாடுகளுடனும் தொடர்புக் கொண்டு இரத்தம் சிந்தாமல் கப்பம் வழங்காது இலங்கையர்கள் 8 பேரையும் காப்பாற்றியுள்ளோம்.
இது இலங்கையின் இராஜதந்திர வெற்றிமட்டுமல்ல இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றியாகவே இதனை கருத முடிகின்றது. பூகோள இராஜதந்திர வெற்றியுமாகும். எதிர்காலத்தில் கேந்திர நிலையமாக இலங்கை உருவாக உள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான நெருக்கடியான சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பஹ்ரேனை தளமாக கொண்டு இயங்கும் பசிபிக் இணைந்து கடல்சார் படை என்பவற்றுடன் எமது கடற்படையும் இணைந்து செயற்பட கிடைத்தமை முக்கியமானதாகும் .
எவ்வாறாயினும் சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்து கூற விரும்ப வில்லை. இறுதியில் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை எவ்வாறு மீட்டோம் என்பதை தெளிவுப்படுத்துகின்றேன்.
துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கேள்விப்பட்டவுடன் கப்பலில் இருந்த இலங்கையர்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேரடியாக தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார். எங்கிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெரியவில்லை. கப்பலில் 70 கொள்ளையர்கள் வரை இருப்பதாக கூறினார்கள். 4 படகுகள் சுற்றிவலைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதன் போது நாம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளை வேறு கோணங்களில் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். ஏனெனில் கடற்படை 8 பேரை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கையில் டுபாயில் உள்ள இலங்கை தூதுவர் கடத்தப்பட்ட கப்பலின் உரிமையாளர்களை சந்தித்து பேசுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதே போன்று எத்தியோப்பியாவில் இருந்த எமது தூதுவர் ஊடாக சோமாலிய அமைச்சர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டோம்.
இந்நிலையில் திடீரென துப்பாக்கி பிரயோகம் நடத்தியப்போது தான் பிரச்சினை நெருக்கடி நிலைக்கு சென்றது. ஒரு மணித்தியாலத்தில் கொலை செய்வதாக கொள்ளையர்கள் கூறியதாக இலங்கையர்கள் எமக்கு தெரிவித்தனர். இதன் பின்னர் நாம் அவசரமாக அமெரிக்காவின் உதவியை நாடினோம். இதன் மூலமாக கிழக்கு சோமாலியாவில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புன்த்லேண்ட் ஜனாதிபதியுடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம். ஜனாதிபதி காஸ் மற்றும் அவரது அரசாங்கத்தின் பிரதான அதிகாரி அப்நசீர் சோபா ஆகியோருடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகளை விளக்கினோம்.
துப்பாக்கி பிரயோகத்தை நிறுத்துமாறு புன்த்லேண்ட ஜனாதிபதியிடம் கோரினோம். இலங்கையர்கள் 8 பேரின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தினோம். இதன் பிரகாரம் துப்பாக்கி பிரயோகம் நிறுத்தப்பட்டதாக கப்பலில் இருந்தவர்களிடம் இருந்து உறுதிப்படுத்தினோம். துப்பாக்கி பிரயோகம் நடத்தும் படகுகளை அப்புறப்படுத்துமாறும் கோரினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை . மாறாக சற்று பின்னோக்கி செல்வதாக அறிவித்தனர்.
கொள்ளையர்களுக்கும் கப்பல் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு புன்த்லேண்ட ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்களின் கோரிக்கை என்ன ? கப்பம் கேட்டார்களா ? கொடுத்தார்களா ? என்பது எமக்கு அவசியமற்றது. ஆனால் இலங்கையர்கள் 8 பேரை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகியிருந்தது.
இந்நிலையில் புன்த்லேண்ட ஜனாதிபதியுடன் வட்சப் ஊடாக தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டு நிலைமைகளை அறிந்தோம். இறுதியில் எவ்விதமான கப்ப பணமும் வழங்காது இரவு கப்பல் விடுவிக்கப்பட்டதாக உத்தியோகப்பூர்மற்ற தகவல் ஊடாக அறிந்து கொண்டோம். கப்பல் புன்த்லேண்ட் துறைமுகத்திற்கு வந்த பின்னர் இலங்கையர்கள் 8 பேருக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் உணவு என்பன ஏற்பாடு செய்வதாக சற்று முன்னர் (நேற்று) எமக்கு அறிவித்தனர்.
எனவே பொறுப்புணர்வுடன் சம்பவம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டமைக்காக முதலில் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி கூறுகின்றோம். அதே போன்று புன்த்லேண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அவரது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகின்றோம். முக்கியமாக அமெரிக்காவிற்கு நன்றிகளை கூறுகின்றோம். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் அவசரமாக செயற்பட்டு எமக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.
புன்த்லேண்ட் ஒரு நாடு அல்ல. சோமாலியாவில் உள்ள சுயநிர்ணய உரிமை கொண்ட மாநிலம். இவர்களுடன் இராஜதந்திர உறவுகள் கிடையாது. இந்நிலையில் அவர்களுடன் எவ்வாறு பேச்சு வார்த்தை நடத்துவது.? துப்பாக்கி பிரயோகம் நடத்திய புன்த்லேண்ட் கடற்படை எமது கடற்படை போன்றதல்ல. ஜனாதிபதியின் கட்டளையை தவிர வேறு யார் கூறியும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இதுவே எமக்கு சாதகமானது என்றார்.
Post a Comment