Header Ads



'ஆமாம் சாமி போடுகின்ற, அரசியல்வாதிகள் வேண்டாம்’ - ஜனாதிபதி

தலைவர்கள் முன்னிலையில், அனைத்துக்கும் ஆமாம் சாமி போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், அவ்வாறல்ல இவ்வாறு என்று விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் நிறுவகத்தை நேற்று (19) திறந்துவைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அரசர்கள் முன்னிலையில் துதி பாடும் அரசியல் பாரம்பரியத்துக்கு இனிவரும் காலங்களில் இடம் கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அறிவு மற்றும் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் இயக்கத்துக்காக இந்த நிறுவகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.    இன்று தூய அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குள்ள முக்கிய சவால் அரசியல்வாதிகளுக்கு அனுபவம் இல்லாமையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில நேரங்களில் வீழ்ந்து சில நேரங்களில் எழுந்து முன்னேறிவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணம் தொடர்பாகக் கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் தெளிவு காணப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.    எந்தவொரு ஊழல்வாதியும் வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு தேர்தலில் வெற்றி பெற முடிந்திருப்பது விருப்புத் தேர்வு முறைமை காரணமாகவேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி மற்றும் தனிநபர் வழிபாடு அரசியல் நிலைமையைச் சரி செய்வதற்கு அறிவையும் தெளிவையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.  

  அரசியல் நிகழ்ச்சிநிரலைப் பார்க்கிலும் சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையின் தேசியத்தையும் பாரம்பரியத்தையும் பேணி, இலங்கையின் கலாசாரத்தை மதிக்கும் தேசாபிமானத்துடன் கூடிய அதிகாரத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரியான கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்டத்துடன் கட்சி அன்றும் இன்றும் ஒரு பலமான அரசியல் கட்சியாக முன்னோக்கிப் பயணிப்பதாக குறிப்பிட்டார்.    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தூய்மையும் நேர்மையும் கொண்ட ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமான ஒரு பாதைக்கு வந்திருப்பதாகவும் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.    அத்துடன், உலகில் எங்குமே இடம்பெறாத அத்தகையதொரு நிகழ்வு எதிர்காலத்திலும் இடம்பெறாது எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.