'ஜெனீவாவில் தலையை ஆட்டிவிட்டு, நாட்டிற்குள்வந்து போலி கோஷம் எழுப்புவதில் பலனில்லை'
அரசாங்கத்தின் இரட்டை வேடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறுவது உறுதியாகும் வகையிலேயே புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொது மக்களை ஏமாற்றும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் போலியான தரவுகளை வெளிப்படுத்தி வருகின்றமை மிகவும் மோசமானதொரு நிலையாகும். எனவே நாட்டின் எதிர்காலம் குறித்து பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்றச்சாட்டுக்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட படையினருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜெனிவாவில் மீண்டும் உறுதிமொழி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் 6 ஆவது தீர்மானம் சர்வதேச நீதிபதிகள் மற்றும் குற்றவியல் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைக்கான அங்கீகாரமாகும்.
சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நீக்குவதற்கு செயற்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு எதனையும் செய்யாது ஜெனிவாவில் அனைத்து விடயங்களுக்கும் தலையை ஆட்டி விட்டு இல்லை நாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்று இலங்கையில் கோஷமிடுவதில் பலனில்லை. எனவே நாட்டு மக்கள் தற்போதைய நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெனிவாவில் அரசாங்கம் செயற்படுகின்ற விதம் இலங்கையின் எதிர்காலம் பாரிய சவாலாகி விடும் நிலையிலேயே காணப்படுகின்றது. நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள விவாதத்தில் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படையாக கூற வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அனைத்துலக குற்றவியல் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் நாட்டுக்கு வந்து இராணுவத்திற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பார்கள்.
இதன் பின்னர் அடையாளம் வெளிப்படுத்தாத சாட்சியங்களின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் நிலை ஏற்படும். அரசாங்கம் சமாளிப்பதற்காக தலையை ஆட்டி விட்டு நாட்டிற்குள் வந்து போலியான கோஷங்கள் எழுப்புவதில் பலனில்லை என்றார்.
Post a Comment