Header Ads



இலங்கையர்களின் விடுதலைக்கு உதவிய 'வட்ஸ் அப்'

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு 'வட்ஸ் அப்' ராஜதந்திர முறைமையை கையாண்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08
இலங்கையர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில், எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் கப்டன்  நிக்கலஸ் அந்தோனி அறிவித்துள்ளார்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்டன் நிக்கலஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து எந்த நிபந்தனைகளுமின்றி, கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களையும் விவித்துள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.