ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் - மகஜர்களை கையளிக்கவும் ஏற்பாடு
-விடிவெள்ளி-
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் நோக்கில் வட மாகாண முஸ்லிம் சிவில் சமூக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜெனிவா சென்றுள்ளனர்.
வட மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளான அப்துல் றமீஸ், அப்துல் காஸிம் ஆரிப் மற்றும் ஜென்ஸிலா மஜீத் ஆகியோர் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.
இதன்போது இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் ஒன்றையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
குறிப்பாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் விரைவாக மீள்குடியேற்றப்படவேண்டும் என்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளிலும் அரசியல் தீர்வை காணும் நடவடிக்ககைகளிலும் முஸ்லிம்களையும் ஒரு தரப்பாக உள்ளீர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தே இந்த மகஜர் ஜெனிவாவில் முஸ்லிம் மக்களின் சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விசேடமாக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களுடன் முஸ்லிம் மத, கலாசார விடயங்களை உள்ளடக்கும் தனியான அதிகார சபை அல்லது அமைச்சு உருவாக்கப்படவேண்டும் என்றும் வட மாகாண முஸ்லிம் சிவில் சமூக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மன்றில் முக்கியமான உயர்மட்ட சந்திப்புக்களை இன்றுமுதல் மேற்கொள்கின்றார்கள்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயீத் அல்-ஹுஸைன், சிறுபான்மையினருக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐஸக் மற்றும் பிரித்தானியா அமெரிக்கா, கனேடிய தூதுவர்களையும் சந்தித்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மனித உரிமை சார் பிரச்சினைகள், சவால்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடவுள்ளார்கள்.
வடக்கு முஸ்லிம்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை வரவேற்பதோடு, அதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இலங்கை அரசாங்கம் பொதுவாக சிறுபான்மை சமூகங்களின் விவகாரங்களில் முற்போக்காக செயற்படுவதற்கு ஆர்வமற்றிருக்கின்றமையினையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் மேற்படிதீர்மானத்தில் வடக்கு முஸ்லிம்கள் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்யும் அதே சந்தர்ப்பத்தில், அவர்களை இதுவிடயத்தில் அறிவூட்டுவதற்குப் போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் வடக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டமொன்றினை உடனடியாக அமுலாகும் வகையில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுவே வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான அடிப்படைத்தீர்வை ஏற்படுத்தும் சூழ்நிலையை வடக்கில் ஏற்படுத்தும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேற்படி தூதுக்குழுவினர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், முஸ்லிம் அமைப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment